திவால் நோட்டீஸ் விட பரிசீலிக்கும் ஜெனரல் மோட்டார்ஸ்
வாஷிங்டன்: அமெரிக்காவைச் சேர்ந்த உலகின் முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனமான ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம் திவால் அறிவிப்பை வெளியிடுவது குறித்து பரிசீலித்து வருகிறது.
உலகப் பொருளாதார நெருக்கடியால் பல பிரபல நிறுவனங்கள், வங்கிகள் காலியாகிக் கொண்டிருக்கின்றன. இந்த வரிசையில் அடுத்து சேரப் போவது ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனமாக இருக்கும் எனத் தெரிகிறது.
நிலைமையை சமாளிக்க திவால் அறிவிப்பு உள்ளிட்ட அனைத்து வாய்ப்புகளையும் பரிசீலித்து வருவதாக ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவன இயக்குநர்கள் குழு அறிவித்துள்ளது.
அதேசமயம், ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவன தலைமை செயலதிகாரியான ரிக் வேகனர், திவால் அறிவிப்பை வெளியிட தேவையில்லை. அது பிரச்சினைக்குத் தீர்வல்ல என்ற கருத்தை வெளிப்படுத்தியிருக்கிறார். இதனால் அவருக்கும், இயக்குநர்கள் குழுவுக்கும் இடையே கருத்து முரண்பாடு ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், நிறுவனத்தின் இயக்குநர்கள் குழு கூடி நிலைமையை சமாளிப்பது குறித்து ஆலோசித்தது. அப்போது திவால் அறிவிப்பு உள்ளிட்ட பல்வேறு வாய்ப்புகள் குறித்து பரிசீலிக்கப்பட்டது.
இருப்பினும் திவால் அறிவிப்பு தீர்வுக்கு பொருத்தமானதல்ல என்ற கருத்தை தலைமை செயலதிகாரி வேகனர் வெளிப்படுத்தியுள்ளார்.
திவால் நிலைமையை தவிர்க்கும் வகையிலான பிற சாத்தியக் கூறுகள் குறித்து தற்போது நிர்வாகம் பரிசீலித்து வருகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேகனரும், போர்ட் மோட்டார் கம்பெனி மற்றும் கிரைஸ்லர் நிறுவனத்தின் தலைமை செயலதிகாரிகள் சமீபத்தில் வெள்ளை மாளிகைக்கு விஜயம் செய்தனர். அங்கு அமெரிக்க எம்.பிக்களை சந்தித்தனர். அப்போது, சரிவிலிருந்து மீள 25 பில்லியன் டாலர் நிதியுதவி செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை வைத்து விட்டு வந்துள்ளனர்.
நிதியுதவி செய்வதற்கு வசதியாக அதுகுறித்த விரிவான திட்டத்துடன் வருமாறு மூன்று தலைமை செயலதிகாரிகளிடமும் எம்.பிக்கள் குழு அறிவுறுத்தியுள்ளது.
இந்த நிலையில்தான் திவால் அறிவிப்பு உள்ளிட்டவை குறித்து பரிசீலிக்கப்படுவதாக ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்தின் இயக்குநர்கள் குழுவிடமிருந்து செய்தி வெளியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications