விமானக் கட்டணங்கள் குறைகின்றன!
மும்பை: விமான டிக்கெட்டுகள் மீதான பரிவர்த்தனை கட்டணம் வாபஸ் பெறப்பட்டுள்ளதால், விமானக் கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது.
விமான டிக்கெட் புக்கிங் அலுவலகங்கள் மூலம் விற்பனை செய்யப்படும் டிக்கெட்டுகளின் மீதான பரிவர்த்தனை கட்டணத்தை ஏர் இந்தியா, ஜெட் ஏர்வேஸ், கிங் பிஷர் ஆகிய நிறுவனங்கள் சமீபத்தில் வாபஸ் பெற்றுள்ளன.
உள்நாட்டுப் பயண எகனாமி பிரிவு டிக்கெட்டுகளின் பரிவர்த்தனை கட்டணம் 300 ரூபாய் வரையிலும் நீக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கான டிக்கெட்டுகளின் பரிவர்த்தனைக் கட்டணம் 1,200 முதல் 10 ஆயிரம் வரை குறைக்கப்பட்டுள்ளது.
மேலும் விமான எரிபொருளின் விலையும் 25 சதவிகிதம் வரை குறைக்கப்பட்டுள்ளது. இதனால் உடனடியாக விமானக் கட்டணங்களைக் குறைத்து சலுகைகளின் பலனை பயனிகளுக்குத் தரும்படி மத்திய அரசு கேட்டுக் கொண்டது.
இதைத் தொடர்ந்து உடனடியாக கட்டணக் குறைப்பில் இறங்கியது அரசுக்குச் சொந்தமான ஏர் இந்தியா நிறுவனம். ஆனால் தனியார் நிறுவனங்கள் இனிமேல்தான் கட்டணக் குறைப்பில் இறங்கப்போவதாக தெரிவித்துள்ளன.












Click it and Unblock the Notifications