For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஈராக் மக்களின் ஹீரோவானார் புஷ் மீது ஷூ வீசிய முன்டாசர்

By Staff
Google Oneindia Tamil News

Muntazer
பாக்தாத்: அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் மீது ஷூக்களை வீசி உலகையே தன் பக்கம் திரும்ப வைத்து விட்ட டிவி நிருபர் முன்டாசர் அல் ஜய்தி, ஈராக் மக்களின் ஹீரோவாகி விட்டார். ஈராக் முழுவதும் முன்டாசரை பாராட்டிக் கொண்டிருக்கிறது.

புஷ் மீதான இந்தத் தாக்குதலை முன்டாசர் பல மாதங்களாக திட்டமிட்டிருந்தாராம். அவருடன் பணியாற்றும் சக ஊழியர்கள் கூறுகிறார்கள்.

28 வயதாகும் முன்டாசர் அல் ஜய்தி, பாக்தாத்தைச் சேர்ந்த அல் பாக்தாதி என்ற தொலைக்காட்சி சேனலின் நிருபராகப் பணியாற்றி வருகிறார்.

புஷ் மீது ஷூ வீசியதன் மூலம் ஈராக் மக்களிடையே ஹீரோவாகி விட்டார் முன்டாசர். பாக்தாத்தின் பல பகுதிகளில் நேற்று அவருக்கு ஆதரவாகவும், அமெரிக்காவை எதிர்த்தும் ஆர்ப்பாட்டங்கள் நடந்தன. நஜப் நகரிலும் இதுபோன்ற ஆர்ப்பாட்டங்கள் நடந்தன.

இச்சம்பவம் குறித்து அமெரிக்க எதிர்ப்பு அமைப்பான சதர் இயக்கத்தைச் சேர்ந்த லிவா சுமீசம் என்பவர் கூறுகையில், ஒவ்வொரு ஈராக்கியின் மனதிலும் என்ன ஓடுகிறதோ, அதைத்தான் முன்டாசர் வெளிப்படுத்தியுள்ளார். நமது நாட்டை ஆக்கிரமித்துள்ள ஒரு நாட்டின் அதிபரைப் பார்த்தால் ஈராக் மக்கள் என்ன செய்ய நினைப்பார்களோ அதைத்தான் முன்டாசர் செய்துள்ளார் என்றார்.

இதற்கிடையே, முன்டாசரின் செயல் நாட்டை அவமதித்து விட்டதாகவும், இதற்காக முன்டாசர் பணியாற்றும் டிவி நிறுவன உரிமையாளர் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் ஈராக் அரசு கோரியுள்ளது. ஆனால் அல் பாக்தாதி நிறுவனமோ, மன்னிப்பு கேட்க முடியாது, முன்டாசரை விடுதலை செய்யுங்கள் என்று அரசிடம் தெரிவித்து விட்டது.

அல் பாக்தாதி அலுவலகத்தில் பணியாற்றும் முன்டாசரின் சக ஊழியர்கள் சிலர் கூறுகையில், சான்ஸ் கிடைத்தால் புஷ் மீது ஷூவை வீசுவேன் என்று பல மாதங்களாகவே கூறிக் கொண்டிருந்தார் முன்டாசர். தற்போது சொன்னபடி செய்து விட்டார்.

ஆரம்பத்தில் அவர் ஏதோ கோபத்துடன் சொல்கிறார் என்றுதான் நினைத்தோம். சீரியஸாக எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால் அவர் ஷூ வீசுவதை திட்டமிட்டு வந்தது இப்போது உறுதியாகி விட்டது.

இந்த செயலின் மூலம் அமெரிக்காவை அசிங்கப்படுத்தி விட்டார் முன்டாசர். அமெரிக்க வீரர்களுக்கும், அமெரிக்க மக்களுக்கும், புஷ்ஷுக்கும் இது மிகப் பெரிய அடி என்று அவர்கள் தெரிவித்தனர்.

இதற்கிடையே, முன்டாசருக்கு இந்த வழக்கில் குறைந்தது 2 வருட சிறைத் தண்டனை கிடைக்கும் என சட்ட நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள். அதேசமயம், அவர் மீது கொலை முயற்சி வழக்கு தொடரப்பட்டால் 15 ஆண்டு சிறைத் தண்டனை வரை கிடைக்குமாம்.

இந்த நிலையில் ஜய்தியின் உயிருக்கு ஆபத்து நேரிடலாம் என அல் பாக்தாதியா நிறுவனத்தின் திட்ட இயக்குநர் முஸீர் அல் கபாஜி அச்சம் தெரிவித்துள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X