தமிழகத்தில் மேலும் 5 ஆர்டிஓ அலுவலகங்கள்
சென்னை: இன்று தொடங்கி ஒரு வாரத்திற்குள் தமிழகத்தில் ஐந்து இடங்களில் புதிய ஆர்.டி.ஓ. (வட்டார போக்குவரத்து அலுவலகங்கள்) திறக்கப்படுகின்றன.
தமிழகத்தில் வாகனங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. அதற்கு தகுந்தவாறு வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் மற்றும் பகுதி அலுவலகங்களின் (யூனிட் ஆபீஸ்) எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
பகுதி அலுவலகங்கள் என்பவை, பக்கத்தில் உள்ள வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தின் கட்டுப்பாட்டில், இயங்கும் வாகனப்பதிவு அலுவலகங்கள் ஆகும். இங்கும் வாகனப்பதிவு உள்பட போக்குவரத்து தொடர்பான பெரும்பாலான பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
தற்போது, வட்டார போக்குவரத்து அலுவலகங்களையும், பகுதி அலுவலகங்களையும் அரசு அதிகஅளவில் திறந்து வருகிறது.
இதுதவிர, பல இடங்களில் பகுதி அலுவலகங்கள், வட்டாரப் போக்குவரத்து அலுவகங்களாக தரம் உயர்த்தப்பட்டு வருகின்றன.
சில நாட்களுக்கு முன்பு வரை புதிதாக திறக்கப்பட்ட அலுவலகங்களையும் சேர்த்து பார்த்தால் தமிழகத்தில் தற்போது, 45 வட்டார போக்குவரத்து அலுவலகங்களும், 55 யூனிட் அலுவலகங்களும் இயங்கி வருகின்றன.
இதுதவிர மேலும் 5 இடங்களில், புதிய வட்டார போக்குவரத்து அலுவலகங்களும், பகுதி அலுவலகங்களும் இந்த வாரத்தில் தொடங்கப்படுகின்றன.
சில இடங்களில் யூனிட் அலுவலகங்கள், வட்டார போக்குவரத்து அலுவலகங்களாக தரம் உயர்த்தவும்படுகின்றன.
அரியலூரில் இன்று புதிய வட்டார போக்குவரத்து அலுவலகம் திறக்கப்படுகிறது. அதன்பிறகு காலை 10.30 மணிக்கு துறையூரில் புதிய பகுதி அலுவலகம் திறக்கப்படுகிறது.
டிச.18ம் தேதி, திருவண்ணாமலையில் உள்ள போக்குவரத்து அலுவலகத்துக்கு புதிய கட்டிடம் திறக்கப்படுகிறது. அன்றையதினமே, ராணிப்பேட்டை மற்றும் ஒசூர் பகுதி அலுவலகங்கள், வட்டார போக்குவரத்து அலுவலகங்களாக தரம் உயர்த்தப்படுகின்றன.
19-ந் தேதி, சேலம் (மேற்கு) போக்குவரத்து அலுவலகத்துக்கும், திருச்செங்கோடு அலுவலகத்துக்கும் சொந்த கட்டிடங்கள் திறக்கப்படுகின்றன. அன்று மாலை, பரமத்தி வேலூரில் புதிய பகுதி அலுவலகம் திறக்கப்படுகிறது.
டிச.22-ம் தேதியன்று, திருச்செந்தூர் மற்றும் வள்ளியூரில் உள்ள போக்குவரத்து அலுவலகங்களுக்கு புதிய கட்டிடங்கள் திறக்கப்படுகின்றன. 23-ந் தேதியன்று, அறந்தாங்கியில் புதிய பகுதி அலுவலகம் திறக்கப்படுகிறது.
அடுத்ததாக, டிச.24-ந்தேதியன்று, ஓட்டன்சத்திரத்தில் புதிய பகுதி அலுவலகம் தொடங்கப்படுகிறது. இதனால் பல்லாயிரக்கணக்கான வாகனஓட்டிகள் பயன்பெறுவார்கள்.
ஸ்மார்ட் கார்டு' எனும் நவீன வகை ஓட்டுனர் உரிமம், சென்னை திருவான்மியூரில் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதில், உரிமதாரரின் பல்வேறு தகவல்களை அதிகாரிகள் எளிதில் தெரிந்து கொள்ள முடியும். இத்திட்டம் தற்போது சென்னையில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
இந்த திட்டம் தமிழகத்தில் அனைத்து போக்குவரத்து அலுவலகங்களிலும் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. இதன் ஒரு பகுதியாக, சிவகங்கையில் இம்மாத இறுதிக்குள் அல்லது அடுத்த மாதம் முதல் வாரத்தில் ஸ்மார்ட் கார்டு திட்டம் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.