ஊனமுற்ற நோயாளிடம் லஞ்சம் டாக்டர் கைது
நாகர்கோவில்: ஊனமுற்ற நோயாளியிடம் லஞ்சம் வாங்கிய நாகர்கோவில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டாக்டர் கைது செய்யப்பட்டார்.
நாகர்கோவில் லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு ஆசாரிபள்ளம் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சில டாக்டர்கள் மற்றும் ஊழியர்கள் லஞ்சம் வாங்குவது குறித்து அதிகாரபூர்வ புகார் வந்தது.
இதைத் தொடர்ந்து லஞ்ச ஓழிப்பு போலீஸ் டிஎஸ்பி சுந்தர்ராஜ் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் கண்ணன், ராஜராம், தர்மராஜ், சப்-இன்ஸ்பெக்டர்கள் அமிர்தராஜ், சித்திரை ஜெயக்குமார், ஏட்டுகள் அசோக்குமார், முருகன், நாகராஜன், மகாவிஷ்ணு, குமரேசன் ஆகிய 11 பேர் அடங்கிய லஞ்ச ஓழிப்பு போலீசார் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு விரைந்தனர்.
அப்போது வெளிநோயாளிகள் கூட்டத்தில் உள்ள உடல் ஊனமுற்றோர் ஆலோசனை பிரிவில் ஏராளமான ஊனமுற்ற ஆண்களும், பெண்களும் நின்றிருந்தனர்.
அங்கு மருத்துவ கல்லூரி உதவி பேராசிரியரும், எலும்பு முறிவு சிகிச்சை டாக்டருமான ஸ்ரீதர் நோயாளிகளை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது உடல் ஊனமுற்ற நோயாளிகள் பலரிடம் இருந்து பணத்தை வாங்கி தனது சூட்கேசில் போட்டுள்ளார்.
அந்த நேரத்தில் அந்த ரூமை லஞ்ச ஓழி்ப்பு போலீசார் சுற்றி வளைத்தனர். டாக்டர் ஸ்ரீதர் நோயாளிகளிடம் பணம் வாங்கும்போது அவரை கையும் களவுமாக பிடித்தனர். அவரிடம் இருந்த சூட்கேசை வாங்கினர். அப்போது அதில் 6 ஆயிரத்து 550 ரூபாய் பணம் இருந்தது.
அவற்றை லஞ்ச ஓழிப்பு போலீசார் பறிமுதல் செய்தனர். இதை எதிர்பார்க்காத டாக்டர் ஸ்ரீதர் செய்வதறியாது தவித்தார்.
ஊனமுற்றோர் சான்றிதழ் வழங்குவதற்காக அங்கு வந்த நோயாளிகளிடம் தலா 100 ரூபாய் வாங்கியுள்ளார்.. நோயாளிகளிடம் லஞ்சம் வாங்கி பிடிபட்ட டாக்டர் ஸ்ரீதர் மீது லஞ்ச ஓழிப்பு போலீசார் ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications