நொய்டாவில் எம்.பி.ஏ மாணவி கொடூர கற்பழிப்பு-5 பேர் கைது
நொய்டா: நித்தாரி படுகொலைகள் மற்றும் ஆருஷி படுகொலைக்குப் பெயர் போன நொய்டாவில், மீண்டு் ஒரு பயங்கர குற்றம் நிகழ்ந்துள்ளது. 24 வயது மாணவியை பத்து பேர் கொண்ட கும்பல் கொடூரமாக கற்பழித்துள்ளது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 5 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
பத்து பேரால் கற்பழிக்கப்பட்ட மாணவி எம்.பி.ஏ. படித்து வருகிறார். இவர் தனது நண்பருடன் காரில் போய்க் கொண்டிருந்தபோது ஒரு கும்பல் வழிமறித்தது. அவர்களை ஒரு புதர் பகுதிக்குள் இழுத்துச் சென்று பெண்ணை அந்தக் கும்பல் கற்பழித்தது.
இந்த அட்டூழியத்தில் ஈடுபட்ட அனைவருக்குமே வயது 20க்குள்தான் என போலீஸார் தெரிவித்துள்ளனர். இந்த கொடூர குற்றத்தில் ஈடுபட்டவர்களில் ஐந்து பேரை போலீஸார் கைது செய்து விட்டனர். மற்றவர்களைத் தேடி வருகின்றனர்.
இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறுகையில், மாருதி வேகன் ஆர் காரில் அந்த மாணவியும், அவரது நண்பரும் ஒரு ஷாப்பிங் சென்டருக்குச் சென்றனர். வரும் வழியில் நான்கு பைக்குகளில் வந்த குற்றவாளிகள், காரை வழிமறித்து நிறுத்தினர்.
பின்னர் காருக்குள் ஏறினர். பிறகு காரை ஒரு ஒதுக்குப்புறமான இடத்திற்கு ஓட்டிச் சென்றனர். அங்கு வைத்து அந்த மாணவியை கற்பழித்துள்ளனர்.
பின்னர் வேறு சிலரும் வந்து இந்த குற்றத்தில் கலந்து கொண்டுள்ளனர். பெண் ஒருவர் சிக்கியுள்ளதாக மொபைல் போன்களில் தகவல் கொடுத்து அவர்களை இந்த அரக்கர்கள் வரவழைத்துள்ளனர் என்று தெரிய வந்துள்ளது.
கற்பழிப்பில் ஈடுபட்டவர்களில் புஷ்பேந்திரா, ஸ்ரீகாந்த், சஞ்சய், சுதிர், கவுதம் ஆகிய 5 பேரை கைது செய்துள்ளோம். இவர்கள் நொய்டா அருகில் உள்ள கார்கி சவுகாண்டி கிராமத்தைச் சேர்ந்தவர்கள். மற்றவர்களையும் தேடி வருகிறோம் என்றனர்.
கற்பழிக்கப்பட்ட மாணவியுடன் சென்ற நண்பர் அமீத் பன்வர் எனத் தெரிய வந்துள்ளது. இவரது தந்தை டெல்லியில் சப் இன்ஸ்பெக்டராக இருக்கிறார்.