வெளிநாடு வாழ் இந்தியர் மாநாட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் கைது
சென்னை: சென்னையில் இன்று தொடங்கிய வெளிநாடு வாழ் இந்தியர் மாநாட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரைப் போலீஸார் கைது செய்துள்ளனர்.
சென்னை நந்தம்பாக்கத்தில் வெளிநாட்டு வாழ் இந்தியர் மாநாடு இன்று காலை தொடங்கியது. பிரதமர் மன்மோகன் சிங் மாநாட்டைத் தொடங்கி வைத்தார்.
9ம் தேதி வரை மாநாடு நடைபெறுகிறது. குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் 9ம் தேதி நிறைவுரையாற்றவுள்ளார்.
பல்வேறு நாட்டு இந்திய வம்சாவளித் தலைவர்கள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கானோர் இதில் கலந்து கொண்டுள்ளனர்.
இந்த மாநாட்டுக்கு இ-மெயில் மூலமாக தீவிரவாதிகள் மிரட்டல் விடுத்த தால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மாநாடு நடைபெறும் இடத்தை சுற்றிலும் கடந்த 3 நாட்களாக போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். இன்று முதல் மாநாடு நடைபெறும் இடத்தில் உச்சக்கட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இந்நிலையில் நேற்று முன் தினம் இரவு சென்னை எழும்பூரில் உள்ள ஏர் இந்தியா விமான நிறுவனத்துக்கு கூரியர் தபால் ஒன்று வந்தது. அதில் மிரட்டல் கடிதம் ஒன்று இருந்தது.
சென்னையில் பிரதமர் பங்கேற்கும் மாநாடு மற்றும் விமான நிலையம் உள்ளிட்ட 8 இடங்களில் வெடிகுண்டுகளோடு தீவிர வாதிகள் ஊடுருவி உள்ளனர் என்று அதில் குறிப்பிடப்பட் டிருந்தது.
லஸ்கர்-இ- தொய்பா பெயரில் அனுப்பப் பட்டிருந்த இந்த மிரட்டல் கடிதம் குறித்து ஏர் இந்தியா நிறுவன மேலாளர் ராமதாஸ் எழும்பூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
முதல் கட்ட விசாரணையில் காரைக்காலில் உள்ள கூரியர் மையம் ஒன்றில் இருந்து வெடிகுண்டு மிரட்டல் கடிதம் அனுப்பப்பட்டது தெரிய வந்தது. இதையடுத்து அங்கு விரைந்து சென்ற எழும்பூர் போலீசார் மிரட்டல் ஆசாமி யார் என்பதை கண்டுபிடித்தனர்.
அவர் தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்தவர் என்று போலீசார் கூறுகின்றனர். காரைக்காலைச் சேர்ந்த அவரை சென்னைக்கு அழைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
எழும்பூர் ஏர் இந்தியா நிறுவனத்துக்கு வந்தது போல காரைக்காலில் உள்ள டிராவல்ஸ் நிறுவனம் ஒன்றிற்கும் மிரட்டல் கடிதம் வந்துள்ளது. இந்த இரண்டு மிரட்டல் கடிதங்களையும் ஒரே நபர்தான் அனுப்பி உள்ளார்.
இந்த மிரட்டல் கடிதங்கள் தொடர்பாக காரைக்கால் போலீசாரும், எழும்பூர் போலீசாரும் இணைந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
போலீசில் சிக்கிய த.மு.மு.க. பிரமுகரை கூரியர் மையத்துக்கு அழைத்துச் சென்று போலீசார் விசாரணை நடத்தினர். மிரட்டல் கடிதத்தை பதிவு செய்த பெண் ஊழியரிடம் அவரை காண்பித்து போலீசார் விசாரித்தனர்.
அப்போது அவர் சில தகவல்களை கூறியுள்ளார். அதன் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
சென்னை நகருக்கு கடந்த சில நாட்களாகவே வெடி குண்டு மிரட்டல்கள் வந்த வண்ணம் உள்ளன. கடந்த 3-ந்தேதி ஒரே நாளில் 4 இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.
சென்னை அண்ணா சாலை, மயிலாப்பூர், ராதா கிருஷ்ணன் சாலையில் உள்ள வணிக வளாகங்கள், அண்ணா சாலை தேவ நேய பாவாணர் அரங்கம், மயிலாப்பூரில் உள்ள வெளிநாட்டு விமான நிறுவனம் ஆகியவற்றுக்கு ஒரே நாளில் வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டிருந்தன.
இது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ராஜ்பவன் மீது விமானம் பறக்க தடை:
இதற்கிடையே, இந்த மாநாட்டில் கலந்து கொள்ள வந்த பிரதமர் மன்மோகன் சிங் ஆளுநர் மாளிகையில் நேற்று இரவு தங்கினார். 9ம் தேதி வரவுள்ள குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீலும் ஆளுநர் மாளிகையில் தங்கவுள்ளார்.
இதனால் ஆளுநர் மாளிகையான ராஜ்பவன் போலீசாரின் பாதுகாப்பு வளையத்தில் உள்ளது. அங்கு அரண் போல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
ராஜ்பவனுக்கு மேல் ஹெலிகாப்டர், விமானங்கள் உள்ளிட்ட வானூர்திகள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. பிரதமர், குடியரசுத் தலைவர் செல்லும் வழி நெடுகிலும் போலீசார் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டுள்ளனர்.