ஒரு நாள் ஆஸ்கர் விருது பெறுவார் ஏ.ஆர்.ரஹ்மான்: ஜெ.
சென்னை: இசைப் புயல் ஏ.ஆர்.ரஹ்மான் ஒரு நாள் ஆஸ்கர் விருது பெற்று நாட்டுக்கும், தமிழ் சினிமாவுக்கும் பெருமை சேர்ப்பார் என அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா வாழ்த்தியுள்ளார்.
கோல்டன் குளோப் விருது பெற்றுள்ள ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ஜெயலலிதா வாழ்த்து செய்தி அனுப்பியுள்ளார். அதில், தாங்கள் "ஸ்லம் டாக் மில்லியனர்' படத்திற்கு இசை அமைத்ததற்காக சர்வதேச சிறப்புமிக்க "கோல்டன் குளோப்' விருது பெற்றதை அறிந்து மிகுந்த மகிழ்ச்சியும், பெருமிதமும் அடைந்தேன்.
இந்த விருது பெறும் முதல் இந்தியர் என்பதற்காக பெருமிதம் ஏற்பட்டது. தமிழக திரைத்துறையைச் சேர்ந்த ஒருவருக்கு இந்த உயரிய விருது கிடைத்திருப்பதற்காக மகிழ்ச்சி அடைந்தேன்.
இது போன்று தாங்கள் மேலும் பல உயர்வுகளை பெற நான் இறைவனை பிரார்த்திக்கிறேன். தாங்கள் நிச்சயமாக ஒரு நாள் ஆஸ்கர் விருதையும் வென்று இந்தியாவுக்கும், தமிழ்நாட்டுக்கும் பெருமை சேர்ப்பீர்கள் என்பது உறுதி என்று ஜெயலலிதா குறிப்பிட்டுள்ளார்.