மண மேடையில் 'இரட்டை கொலை' மாப்பிள்ளை கைது
நாகர்கோவில்: இரட்டை கொலை வழக்கில் 7 ஆண்டுகளாக உச்ச நீதிமன்றத்தில் ஆஜராகாமல், மஸ்கட்டில் தலைமறைவாக இருந்தவர் கல்யாண மேடையில் வைத்து நேற்று போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே உள்ள திக்கணங்கோடு பாட்டவிளையை சேர்ந்தவர் ராபி (வயது 39). இவருக்கு சார்லஸ், ரவி ஆகிய இரண்டு சகோதரர்கள் உள்ளனர்.
கடந்த 1992ல் சுதந்திர தினந்தன்று வயலுக்கு தண்ணீர் பாய்ச்சுவது தொடர்பாக அம்பலக்கோட்டை பகுதியை சேர்ந்த பாலையன், மகாலிங்கம், ரவீந்திரன் ஆகிய 3 பேருக்கும், ராபி சகோதரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
இதில் பாலையன், மகாலிங்கம் ஆகிய 2 பேர் கொலை செய்யப்பட்டனர்.
இவ்வழக்கை விசாரித்த நாகர்கோவில் கோர்ட் 1995ல் ராபி மற்றும் அவரது சகோதரர்கள் 2 பேருக்கும் ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்தது.
தண்டனையை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் ராபி குடும்பத்தினர் மேல்முறையீடு செய்தனர். அதில் இந்த 3 பேரும் விடுதலை செய்யப்பட்டனர்.
சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் கொலையான பாலையன், மகாலிங்கம் குடும்பத்தினர் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் சார்லஸ், ரவி ஆகிய 2 பேரும் ஆஜரானார்கள். ராபி தலைமறைவாகி விட்டார்.
அரபு பகுதியில் உள்ள மஸ்கட்டுக்கு தப்பிச் சென்ற அவர் அங்கு கொத்தனார் வேலை பார்த்து வந்துள்ளர். கடந்த 7 ஆண்டுகளாக அவர் கோர்ட்டில் ஆஜராகவில்லை.
இந்நிலையில் மஸ்கட்டில் இருந்து ராபி இந்தியா வந்து திங்கள்சந்தை பகுதியில் தங்கி இருந்தார். அவருக்கும் திங்கள்சந்தை பறையன்விளை பகுதியை சேர்ந்த செண்பகபெருமாள் மகள் ராணிக்கும் திருமணம் நடத்த முடிவு செய்து திருமண அழைப்பிதழ் அடிக்கப்பட்டது.
உச்ச நீதிமன்ற பிடிவாரண்ட் உத்தரவுடன் ராபியை தேடி வந்த போலீசாருக்கு, ராபி ஊருக்கு வந்திருப்பதும் அவருக்கு திருமணம் நடக்க போகும் தகவலும் தெரிய வந்தது.
இந்நிலையில் திங்கள்சந்தை ராதாகிருஷ்ணன் கோவிலில் ராபி-ராணி திருமணம் நேற்று காலை நடந்தது. கோவிலில் இருந்து அருகில் உள்ள கல்யாண மண்டபத்துக்கு மணமக்கள் அழைத்து வரப்பட்டனர்.
அப்போது போலீசார் திடீரென்று திருமண மண்டபத்துக்குள் நுழைந்து ராபியை கைது செய்தனர். அவரை தக்கலை போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications