சென்னை-பொங்கலுக்கு ரூ.6 கோடிக்கு மது விற்பனை
சென்னை: தமிழர் திருநாளாம் பொங்கலையொட்டி சென்னையில் மட்டும் ரூ. 6 கோடிக்கு மது விற்பனை நடந்துள்ளது.
பண்டிகை மற்றும் விடுமுறை நாட்கள் என்றால் டாஸ்மாக் கடைகளில் கூட்டமே அலைமோத ஆரம்பித்து விடுகிறது.
தற்போது சென்னையில் டாஸ்மாக் மதுக்கடைகள் 3 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு நிர்வகிக்கப்பட்டு வருகின்றன. வடசென்னையில் 143, மத்திய சென்னையில் 174, தென் சென்னையில் 148 என மொத்தம் 465 மதுக்கடைகள் உள்ளன.
பொங்கலுக்கு முந்தைய நாள் மத்திய சென்னையிலுள்ள மதுக்கடைகளில் மட்டும் சுமார் 1 கோடியே 54 லட்சம் ரூபாய் அளவுக்கு மதுவிற்பனை ஆகியுள்ளது. பொங்கல் அன்று இது 2 கோடியே 13 லட்சம் ரூபாயாக அதிகரித்துள்ளது.
தென் சென்னையில் 13ம் தேதி ரூ.1 கோடியே 85 லட்சத்துக்கும், பொங்கல் அன்று ரூ.2 கோடியே 60 லட்சத்துக்கும் மது வகைகள் விற்றுள்ளன. வட சென்னை பகுதியில் உள்ள மதுக்கடைகளிலும் ரூ.2 கோடிக்கும் அதிகமான மது விற்பனை நடைபெற்றுள்ளது.
இதில் பீர் வகைகளைவிட ஹாட் வகைகள் அதிக விற்பனையாகியுள்ளது.
மொத்தத்தில் பொங்கல் பண்டிகை அன்று சென்னையில் மட்டும் ரூ. 6 கோடிக்கும் மேல் மதுவகைகள் விற்பனையாகியுள்ளன.
பணி நிரந்தரம்-ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்:
இதற்கிடையே பணி நிரந்தரம், அரசு ஊழியர்களுக்கு இணையாக சம்பளம் உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் சுமார் 500 பேர் கைது செய்யப்பட்டனர்.
தமிழகம் முழுவதும் சுமார் 34,000க்கும் மேற்பட்ட டாஸ்மாக் ஊழியர்கள் சில்லறை விற்பனை நிலையங்களில் கடந்த 5 ஆண்டுகளாக பணியாற்றி வருகின்றனர்.
இவர்கள் தங்களுக்கு பணி நிரந்தரம், எட்டு மணி நேர வேலை, பண்டிகை காலங்களில் விடுமுறை, அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் சலுகைகள் போன்றவற்றை வழங்க கோரி சென்னை, மதுரை உள்ளிட்ட தமிழகத்தின் முக்கிய இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
சென்னை எழும்பூரில் உள்ள தாளமுத்து நடராஜன் மாளிகை டாஸ்மாக் இயக்குனர் அலுவலகம் முன்பு மறியல் போராட்டம் நடத்த ஊர்வலமாக புறப்பட்டனர்.
அப்போது அங்கே வந்த போலீசார் டாஸ்மாக் ஊழியர்களின் சங்கத் தலைவர் பாஸ்கரன், கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏ. மகேந்திரன், சிஐடியு பொதுச்செயலாளர் சௌந்தரராஜன், சிஐடியு மாநில செயலாளர் திருச்செல்வம் உள்ளிட்ட 150க்கும் அதிமானவர்களை கைது செய்தனர்.
அதேபோல் மதுரையில் சிபிஎம் பாராளுமன்ற உறுப்பினர் மோகன் தலைமையில் சினிப்பிரியா திரையரங்கம் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சுமார் 300 பேரை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications