சத்யம்: மிரள வைக்கும் புதுப்புது மோசடிகள்!

இந்த ரூ. 7,800 கோடி மோசடி தவிர, பினாமி கணக்குகள் மூலம் மட்டும் ராஜு வெளிநாட்டுக்குக் கடத்தியுள்ள பணம் ரூ.2,800 கோடிக்கும் அதிகம் என்கிறது முதல்கட்ட புலானாய்வு விசாரணை. மேலும் 3,800 கோடி ரூபாய் டெபாஸிட்டுகளையும் 'காணவில்லை'யாம்!
இந்த மோசடியில் சுமார் ரூ. 1,840 கோடி அளவுக்கு பாங்க் ஆப் பரோடா வங்கி மூலம் மட்டுமே போலியான நபர்களுக்கு பணம் அனுப்பப்பட்டுள்ளது.
அதாவது எல்லாமே போலிக் கணக்குகள். அனுப்பப்பட்ட பணம் மட்டும் நிஜம். இதுதான் ராஜுவின் டெக்னிக்.
வெளிநாடுகளில் தனது க்ளையண்டுகளாகவும், ஏஜென்ஸிகளாகவும் நூற்றுக்கணக்கான போலி நிறுவனங்களை உருவாக்கி, அவர்களுக்கு சத்யம் நிறுவனத்தின் பணத்தை தொடர்ந்து அனுப்பி வந்துள்ளார் ராஜூ.
இந்தத் தொகைதான் ரூ.1800 கோடியைத் தாண்டுகிறது. இந்தப் பணம் முழுவதும் பேங்க் ஆப் பரோடா வங்கி மூலம் அனுப்பப்பட்டுள்ளதாக ராஜு வீட்டிலிருந்து கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் சொல்கின்றன.
டெபாசிட்டுகள் எங்கே?:
சத்யம் நிறுவனத்தின் பல்வேறு டெபாஸிட்டுகளாக ரூ.3,800 கோடியும், நடப்புக் கணக்கில் ரொக்கமாக ரூ.1,300 கோடியும் இருப்பதாக சத்யம் கணக்குகள் காட்டுகின்றன. ஆனால் இந்த தொகை டெபாஸிட் செய்யப்பட்டுள்ளதாக ராஜு குறிப்பிட்டிருக்கும் வங்கிகள், 'டெபாஸிட்டா... அப்படீன்னா...?' என்கிற ரீதியில் திருப்பிக் கேட்கத் தொடங்கியுள்ளன.
உதாரணத்துக்கு ஐசிஐசிஐ வங்கியில் ரூ.1,000 கோடி சத்யம் கணக்கில் இருப்பதாக சத்யம் கணக்கு ஏடுகள் தெரிவிக்கின்றன. இதற்கான வங்கிக் கணக்குப் புத்தகம், வருமான வரி கட்டிய ரசீது எல்லாமே பக்காவாக உள்ளன. ஆனால் ஐசிஐசிஐ வங்கியோ, அப்படி ஒரு கணக்கே சத்யம் நிறுவனத்துக்கு தங்கள் வங்கியில் இல்லை என நேற்று அறிவித்துவிட்டது.
அப்படியெனில் இந்த ஆவணங்கள், அதிலுள்ள வங்கி அதிகாரிகள் கையெழுத்து, வருமான வரி கட்டப்பட்டது... இந்த சந்தேகங்கள் விசாரணை அதிகரிகளை திக்பிரமை கொள்ள வைத்துள்ளன.
இன்னும் இப்படி ஏராளமான மோசடிக் கணக்குகள் அம்பலத்துக்கு வரவிருப்பதாகத் தெரிவிக்கின்றன புலனாய்வு ஏஜென்ஸிகள்.












Click it and Unblock the Notifications