மான்ஸ்டர் இணையதளத்தின் டேட்டா பேஸ் திருடு போனது
நியூயார்க்: உலகின் மிகப் பிரபலமான வேலைவாய்ப்பு இணையதளம் மான்ஸ்டரின் டேட்டாபேஸை யாரோ திருடிவிட்டனர். இதனால் பெரும் பரபரப்பு எழுந்துள்ளது.
சர்வதேச அளவில் வேலைவாய்ப்பு தேடித் தருவதற்காக இயங்கும் இணையதளங்களில் முதன்மையானது மான்ஸ்டர். சில தினங்களுக்கு முன் இந்த தளத்தின் பாஸ்வேர்டைத் திருடி தளத்தை ஹேக் செய்துவிட்ட சிலர், தளத்துக்குள் இருந்து விவரத் தொகுப்பை (டேட்டா பேஸ்) திருடி விட்டார்களாம்.
நேற்று இதனை அந்நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் நிக்கி ரிச்சர்ட்ஸன் உறுதிப்படுத்தினார். உலகம் முழுக்க இந்தப் பிரச்சினை நிலவுவதாகவும், ஐரோப்பா மற்றும் ஆசியா பசிபிக் பகுதிகளில் இந்த நிலை சற்றுக் குறைவாக உள்ளதாகவும் நிக்கி தெரிவித்தார்.
இந்த குற்றத்தைச் செய்தவர்கள் மீது விரைவில் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்ற நிக்கி, எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் மான்ஸ்டர் டேட்டாபேஸைத் திருடினார்கள் என்பதை வெளியிட மறுத்துவிட்டார்.
36 நாடுகளில் 45 லட்சம் பேரின் முழுமையான விவரங்களைக் கொண்டுள்ள இந்த தளத்திலிருந்து கிட்டத்தட்ட அனைத்து விவரங்களையுமே கடத்தியுள்ளனர் இந்த சைபர்கிரைம் கில்லாடிகள்.
இந்தவிவரங்களை வைத்துக் கொண்டு, சம்பந்தப்பட்டவர்களுக்கு மான்ஸ்டர் பெயரிலோ அல்லது வேறு புதிய பெயரிலோ வேலைவாய்ப்புக்கான கடிதங்களை அனுப்பி பெரிய அளவில் பணம் பறிக்க இந்த கும்பல் முயற்சித்து வருவதாகவும் கூறப்படுகிறது.
இதனால் தங்கள் தளத்தில் கணக்கு வைத்திருக்கும் நபர்கள் இனி புதிய பாஸ்வேர்டு மற்றும் அடையாளப் பெயர்களைப் பயன்படுத்துமாறும், முன்பின் தெரியாத, சந்தேகத்துக்குரிய மெயில்களுக்கு பதில் கூற வேண்டாம் என்றும் அறிவுறுத்தியுள்ளது மான்ஸ்டர்.
ஏற்கெனவே வேலை இழப்பில் திண்டாடித் தெருவில் நிற்பவர்களுக்கு இப்படியொரு சோதனையா!