முத்துக்குமார் உடலை அடக்கம் செய்வதை எதிர்த்து மாணவர்கள் போர்க்கொடி

இன்று காலை 10 மணிக்கு முத்துக்குமாரின் உடல் அடக்கம் செய்யப்படுவதாய் இருந்தது. ஆனால் தமிழகமெங்கிலும் இருந்து மருத்துவ,சட்டக்கல்லூரி, கலைக்கல்லூரி மாணவர்கள் வந்து முத்துக்குமாருக்கு அஞ்சலி செலுத்துவதால் இன்று மாலை உடல் அடக்கம் செய்யலாம் என்று முடிவெடுத்தனர் அரசியல்வாதிகள்.
முத்துக்குமார் தனது கடைசிக்கடிதத்தில், 'என் பிரேதத்தை உடனே எரித்து விடாதீர்கள். துருப்புச் சீட்டாக வைத்துக்கொண்டு முடிந்தவரை போராடுங்கள்' என்று சொல்லியிருக்கிறார்.
அதனால் சீக்கிரத்தில் உடல் அடக்கம் செய்ய மாட்டோம் என்று மாணவர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.
மேலும்,முத்துக்குமார் உடல் அடக்கம் செய்வதை பொறுத்தவரை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம். அரசியல்வாதிகள் தலையிடாதீர்கள் என்று சொல்லி வருகின்றனர்.
இதனால் முத்துக்குமாரின் உடல் அடக்கம் வரும் ஞாயிற்றுக்கிழமைதான் நடக்கும் என்று தெரிகிறது.
தங்கர்பச்சான் ஆவேசம்!
இந்நிலையில், திரைப்பட ஒளிப்பதிவாளரும், இயக்குநருமான தங்கர்பச்சான், முத்துக்குமாருக்கு அஞ்சலி செலுதச்த வந்தார். அப்போது மாணவர்களின் நிலையை அறிந்து அவர்களுக்கு ஆதரவாகப் பேசினார்.
நான் இத்தனை காலம் திரைத்துறையில் இருந்தும் முத்துக்குமார் எடுத்த முடிவு போல் எடுக்க நினைக்கவில்லை. இதற்காக நான் வெட்கப்படுகிறேன். 'என் பிரேதத்தை துருப்பு சீட்டாக வைத்துக்கொண்டு போராடுங்கள்' என்று சொல்லியிருக்கிறார் முத்துக்குமார்.
இந்த ஒரு வாசகம் போதும். வாருங்கள் இளைஞர்களே போராடுவோம். இளைஞர்களால் தான் இலங்கை பிரச்சனைக்கு தீர்வு தர முடியும்" என்றார் அவர் ஆவேசமாக.
தமிழ் சினிமா பிரபலங்களான நடிகர் சத்யராஜ், இயக்குநர் சேரன் ஆகியோரும் வந்து முத்துக்குமாருக்கு அஞ்சலி செலுத்தினர்.
அப்போது சேரன், 'முத்துக்குமார் தனது கடைசிக் கடிதத்தில்..' என் பிரேதத்தை உடனே எரித்து விடாதீர்கள். துருப்புச் சீட்டாக வைத்துக்கொண்டு முடிந்தவரை போராடுகள் என்று சொல்லியிருக்கிறார். அதனால் சீக்கிரத்தில் உடலை அடக்கம் செய்யக் கூடாது. இலங்கை பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும் வரை முத்துக்குமாரின் உடலை அடக்கம் செய்ய சம்மதிக்கக்கூடாது.
அப்போதுதான் முத்துக்குமாரின் ஆத்மா சாந்தியடையும்" என்றார்.
உடல் அடக்கத்திற்கு மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருவதால் அப்பகுதியில் தொடர்ந்து பரபரப்பு நிலவி வருகிறது.
விடுதலைப் புலிகள் அஞ்சலி
இதற்கிடையே, முத்துக்குமாரின் மறைவுக்கு விடுதலைப் புலிகள் இயக்கம் அஞ்சலி செலுத்தியுள்ளது.
இதுதொடர்பாக புலிகள் இயக்க அரசியல் பிரிவு தலைவர் பா.நடேசன் வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழீழத்தில் சிங்களப் பேரினவாத அரசின் இன அழிப்புப் போருக்கு எதிராக தமிழீழ மக்கள் நடாத்தி வரும் விடுதலைப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தும் சிங்கள அரச படைகளின் கொடூரமான தமிழின அழிப்புப் போருக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், ஏழு கோடி தொப்புள்கொடி உறவுகளான தமிழக மக்களின் உணர்வுகளைப் பிரதிபலிக்கும் முகமாக தீக்குளித்து தனது இன்னுயிரை அர்ப்பணித்த வீரத் தமிழ்மகன் முத்துக்குமாருக்கு தமிழீழ மக்கள் சார்பிலும், எமது விடுதலை இயக்கத்தின் சார்பிலும் வீரவணக்கத்தை தெரிவித்துக் கொள்கின்றோம்.
உலகத் தமிழினத்தின் வரலாற்றில் அன்புத் தம்பி முத்துக்குமாருக்கு என்றுமே அழியாத இடம் உண்டு.
அன்புத் தம்பியின் குடும்பத்துக்கும் எமது ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
தமிழீழ மக்களுக்கான ஏழு கோடி தமிழக உடன்பிறப்புக்களின் தொடர்ச்சியான போராட்டங்கள் உலகத்தின் மனச்சாட்சியைத் தட்டி நிற்கின்றன.
உங்களின் தொடர்ச்சியான போராட்டங்களுக்கு உலகத் தமிழினத்தின் வரலாற்றில் குறிப்பாக தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் என்றுமே தனித்துவமான இடம் உண்டு.
எமது மக்கள் சிங்கள அரசின் கொடுமையான இன அழிப்புப் போருக்கு முகம் கொடுத்து நிற்கும் இவ்வேளையில் உங்களின் எழுச்சி கண்டு மன ஆறுதலும் உற்சாகமும் அடைகின்றோம் என அதில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications