அரசியல் கட்சிகளின் பந்த்களுக்கு தடை விதிக்க முடியாது - சுப்ரீம் கோர்ட்
டெல்லி: அரசியல் கட்சிகள் நடத்தும் பந்த் போராட்டங்களுக்கு தடை விதிக்க முடியாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இலங்கையில் நடந்து வரும் இனப்படுகொலைக்குக் கண்டனம் தெரிவித்து பிப்ரவரி 4ம் தேதி தமிழகத்தில் பந்த் நடத்த இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் அழைப்பு விடுத்திருந்தது.
இதை தடை செய்யக் கோரி தமிழகத்தை சேர்ந்த வக்கீல் சரவண சதீஷ்குமார் என்பவர் உச்சநீதிமன்றத்தில் பொது நலன் மனுவைத் தாக்கல் செய்தார்.
ஆனால் இடைக்கால தடை விதிக்க முடியாது என உச்சநீதிமன்றம் மறுத்து விட்டது. விசாரணை பிப்ரவரி 16ம் தேதி்க்கு தள்ளி வைக்கப்பட்டது.
நேற்று இந்த மனு மீண்டும் விசாரணைக்கு வந்தது. விசாரணைக்குப் பின்னர் தலைமை நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணன், பி.சதாசிவம் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் தீர்ப்பை அளித்தது.
அதில், சில அரசியல் கட்சிகள் அடங்கிய ஒரு அமைப்பு அறிவித்து இருந்த பொது வேலை நிறுத்த போராட்டத்தை சட்ட விரோதம் என அறிவிக்கும்படி மனுதாரர் கோரிக்கை விடுத்து இருந்தார்.
அரசியல் கட்சிகள் போராட்டம் மற்றும் வேலை நிறுத்தங்களை மேற்கொள்ளலாம். எந்த சட்டத்திலும் இதற்கு தடை விதிக்கப்படவில்லை. எனவே பொது வேலை நிறுத்தத்துக்கு தடை விதிக்க முடியாது என்று நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.