7.2 மில்லியன் மக்கள் வேலையிழப்பார்கள்!-ஐஎல்ஓ
மணிலா: இந்த ஆண்டு மட்டும் வேலையிழக்கப் போகும் ஆசியர்களின் எண்ணிக்கை 72 லட்சமாக இருக்கும் என பன்னாட்டு தொழிலாளர் அமைப்பு (ஐஎல்ஓ) எச்சரித்துள்ளது. ஜெனீவாவில் இயங்கும் இந்த ஐநா துணை அமைப்பு மேலும் பல திடுக்கிடும் கணிப்புகளை வெளியிட்டுள்ளது.
ஆசிய பிராந்தியத்துக்கான வேலைவாய்ப்புகள் குறித்து ஐஎல்ஓ இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:
2009ம் ஆண்டு ஆசியா முழுக்க வேலையின்றி தவிக்கும் நபர்களின் எண்ணிக்கை 9.2 கோடியாக உயரும்.
மேற்கத்திய நாடுகளை கடந்த 2 ஆண்டுகளாக வாட்டி வதைத்து வரும் பொருளாதார நெருக்கடி இப்போது இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகளையும் வேகமாக வீழ்த்தி வருகிறது. இதன் விளைவாக இந்த 2009ம் ஆண்டு மட்டுமே ஆசிய நாடுகளில் கடந்த ஆண்டைக் காட்டிலும் கூடுதவாக 7.2 மில்லியன் அதாவது 72 லட்சம் பேர் வேலையிழப்பார்கள் என ஐஎல்ஓ எதிர்பார்க்கிறது.
இது குறைந்தபட்ச மதிப்பீடுதான் அதிகபட்சமாக 90 லட்சம் பேர் வரை பாதிக்கப்படலாம் என தனது அறிக்கையில் ஐஎல்ஓ குறிப்பிட்டுள்ளது.
இந்த ஆண்டு இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகளில் 5.1 கோடி பேருக்கு புதிய வேலைவாய்ப்புகள் தோவைப்படுமாம். இதில் இந்தியாவுக்கு மட்டுமே 22.3 மில்லியன் புதிய வேலைகள் தேவை என்கிறது ஐஎல்ஓ.