குஜராத்-பாஜகவே முன்னிலை..ஆனால் காங். நெருகுகிறது

குஜராத்தில் சட்டமன்றத் தேர்தல் என்று வந்தால் நரேந்திர மோடியை பெருமளவில் ஆதரித்து பாஜகவை ஆட்சியில் அமர வைத்து வரும் மக்கள் மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு முழு அளவில் வாக்களிப்பதை தவிர்த்து வருகின்றனர்.
சட்டமன்றத் தேர்தலில் மோடி வென்ற நிலையில் கடந்த மக்களவைத் தேர்தலிலேயே அது எதிரொலித்தது. மொத்தமுள்ள 26 இடங்களில் 14ல் பாஜக வென்றது. கிட்டத்தட்ட அதற்கு சரிசமமாக 12 இடங்களில் காங்கிரஸ் வென்றது.
ஆனால், அடுத்து வந்த சட்டமன்றத் தேர்தலில் மோடி அமோக வெற்றி பெற்றார். ஆனாலும் வரும் மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு இணையான இடங்களை மீண்டும் காங்கிரஸ் பிடிக்கும் என்று கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது.
மக்களவைத் தேர்தலில் யாருக்கு வாக்களிப்பீர்கள் என்ற கேள்விக்கு 47 சதவீதம் பேர் பாஜகவுக்கு என்றும், 45 சதவீதம் பேர் காங்கிரசுக்கு என்றும் பதிலளித்துள்ளனர். இது கடந்த தேர்தலுடன் ஒப்பிடுகையில் பாஜகவுக்கு 2 சதவீத இழப்பாகும். அதே நேத்தில் காங்கிரசுக்கு மக்கள் ஆதரவு 6 சதவீதம் அதிகரித்துள்ளது.
மாயாவதியின் பகுஜன் சமாஜுக்கு ஆதகவு 1 சதவீதம் சரிந்து 2 சதவீத மக்கள் ஆதரவே இப்போது உள்ளது.
பிற்பட்டோர்-தலித்கள் ஆதரவு-பாஜக இழப்பு:
பாஜகவுக்கு படேல்கள், படிதர் ஆகிய சமூக மக்களிடையே 10 சதவீத ஆதரவு உள்ளது. அதே நேரத்தில் பிற்படுத்தபட்ட சமூகத்தைச் சேர்ந்த விவசாயிகளிடையே பாஜகவின் செல்வாக்கு 12 சதவீதம் அளவுக்கு சரிந்துள்ளது.
அதே போல தலித்களிலும் 7 சதவீதம் பேரின் ஆதரவை பாஜக இழந்துள்ளது. அதே போல பழங்குடி இனத்தினர் இடையே பாஜகவி்ன் செல்வாக்கு 12 சதவீதம் சரிந்துள்ளது.
அதே நேரத்தில் ஒட்டுமொத்தத்தில் 72 சதவீதம் பேர் மோடியின் ஆட்சி திருப்தி அளிப்பதாகத் தெரிவித்துள்ளனர்.
இம்முறை கேசுபாய் படேல் போன்ற அதிருப்தியாளர்கள் இல்லாத நிலையில் பாஜக தேர்தலை சந்திக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஆனால், மோடியை எதிர்கொள்ளும் அளவுக்கு காங்கிரசில் பிரச்சார பீரங்கிகள் இல்லாதது அந்தக் கட்சிக்கு பெரும் பின்னடைவாக அமையும் என்றும் தெரியவந்துள்ளது.
இருப்பினும் இப்போதுள்ள நிலையில் பாஜகவே முன்னிலையில் உள்ளது. வெறும் 2 சதவீத வேறுபாடுட்டுடன் இரண்டாவது நிலையில் உள்ள காங்கிரஸ் தனது வாக்கு சதவீதத்தை மேலும் அதிகரித்தால் தவிர பாஜகவே அதிக இடங்களில் வெல்லலாம் என்று கருத்துக் கணிப்பு தெரிவிக்கிறது.












Click it and Unblock the Notifications