சிறுமியின் நுரையீரலில் சிக்கிய 'பல்ப்'
கொல்கத்தா: சிறுமியின் நுரையீரலில் சிக்கிக் கொண்ட பல்ப் அறுவை சிகிச்சை மூலம் வெற்றிகரமாக அகற்றப்பட்டது.
கொல்கத்தா அருகே உள்ள சோனார்பூரை சேர்ந்த நான்கு வயது சிறுமி பிராதிமா அலிம்ஜார் கடந்த வாரம் சிறிய பல்ப் ஒன்றை விழுங்கவிட்டார். இதனால் அந்த சிறுமிக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது.
இதையடுத்து அவரது பெற்றோர்கள் அவரை அருகிலிருக்கும் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்குள்ள டாக்டர்கள் சுமார் 2 மிமீ நீளமும், 1 மிமீ., அகலமும் கொண்ட அந்த பல்ப், அவரது உணவு பாதையில் சிக்கி இருப்பதாக நினைத்து சில மலமிளக்கிகள் கொடுத்து அதன் மூலம் வெளியேற்ற முயற்சி செய்துள்ளனர்.
ஆனால் அந்த முயற்சிக்கு எந்த பலனும் கிடைக்காததை அடுத்து சிறுமியின் பெற்றோர் அவளை கொல்கத்தா மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
அங்கு சிறுமிக்கு மூச்சு திணறலும், சளித் தொல்லையும் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் இருந்தது. இந்நிலையில் பல்ப் நுரையீரலில் சிக்கி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு குழந்தைக்கு அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்யப்பட்டது.
அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடத்தப்பட்டு பல்ப் அகற்றப்பட்டது. இது குறித்து அறுவை சிகிச்சை செய்த டாக்டர் அருனவா சென்குப்தா கூறுகையில்,
பல்ப் குழந்தையின் வலது நுரையீரலில் சிக்கி கொண்டது. அவளது நிலைமை தொடர்ந்து மோசமாகி கொண்டு இருந்ததால் தான் அறுவை சிகிச்சை முடிவுக்கு வந்தோம். நுரையீரல் மிகவும் மென்மையான பகுதி என்பதால் பல்ப் உடையாமல் எடுப்பதற்கு மிகவும் கஷ்டப்பட்டோம் என்றார் டாக்டர் சென்குப்தா.