கோவையில் கடும் மூடுபனி-விமான சேவை பாதிப்பு
கோவை: கோவையில் நிலவி வரும் கடும் மூடுபனி காரணமாக அங்கு விமான சேவைகள் பாதிக்கப்பட்டன. அனைத்து விமானங்களும் தாமதமாக வந்தன.
கடந்த சில நாட்களாக கோவை மாநகரில் வெயில் சுட்டெரித்து வருகிறது. அதேசமயத்தில் இரவில் கடும் குளிர் மக்களை வாட்டி வருகிறது. இதனால் மக்கள் பெரும் கஷ்டத்தை சந்தித்து வருகிறார்கள்.
காலை 8 மணி வரை வெளிச்சம் தெரிவதில்லை. எதிரே என்ன வருகிறது என்பதை அறியமுடியாத நிலையில் வாகன ஓட்டிகள் விளக்குகளை போட்டப்படி வண்டி ஓட்டி வருவதை சகஜமாக காண முடிகிறது.
பாதைகள் தெளிவாக தெரியாதநிலையில் மிகவும் மெதுவாக செல்வதால் சரக்கு வாகனங்கள் குறித்த நேரத்தில் செல்ல முடிவதில்லை. இதனால் சில தொழிற்சாலை வேலைகளும் தாமதமாகி வருகின்றன.
மூடுபனியின் காரணமாக விமான சேவையும் பாதிக்கப்பட்டது. சென்னையில் இருந்து கோவை வர வேண்டிய அனைத்து விமானங்களும் தாமதமாக வந்தன.
காலை 6.55க்கு வந்து சேர வேண்டிய கிங்பிஷர் விமானம் சுமார் 1 மணி நேரம் தாமதாக 8 மணிக்கு வந்தது. 7.40க்கு வரவேண்டிய பாரமவுண்ட் விமானம் 20 நிமிடம் தாமதமாகவும், 8 மணிக்கு வரவேண்டிய ஜெட் ஏர்வேஸ் விமானம் 9 மணிக்கும் கோவை வந்தன.
இந்த விமானங்களின் மூலம் சென்னை செல்ல காத்திருந்தவர்கள் மிகவும் சிரமத்துக்கு ஆளானார்கள்.












Click it and Unblock the Notifications