போலீசார் உண்ணாவிரத திட்டம்?-பரபரப்பு போஸ்டர்கள்
சென்னை: உயர் நீதிமன்றத்தில் நடந்த மோதலை கண்டித்து போலீஸ் சங்கம் என்ற பெயரில் சென்னையில் பரபரப்பு சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.
அதில், உயர்நீதிமன்ற வளாகத்தில் காவல் நிலையத்தை எரித்து காவலரை தாக்கி மகளிர் காவலர்களை மானபங்கபடுத்தியதை கண்டித்து காவலர் நலசங்கம் சார்பில் உண்ணாவிரதம். அனைவரும் வாரீர் ஆதரவு தாரீர். இடம்-சேப்பாக்கம், விருந்தினர் மாளிகை.
நாள்-2ம் தேதி, நேரம்-காலை 9 மணி என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த சுவரொட்டிகள் சென்னையில் முக்கிய பகுதிகளில் ஏராளமாக ஒட்டப்பட்டுள்ளன.
சுவரொட்டிகளில் குறிப்பிடப்பட்டபடி போலீஸ் சங்கம் என்ற ஒரு அமைப்பே இல்லை அதே போல சேப்பாக்கத்தில் உண்ணாவிரதம் இருக்க 2ம் தேதி யாருக்கும் அனுமதி அளிக்கப்படவும் இல்லை.
இந்த சுவரொட்டிகள் குறித்து விசாரிக்க வேண்டிய போலீசாரும், உளவுத் துறையினரும் உண்ணாவிரதம் குறித்தும் மெளனம் சாதிக்கின்றனர்.
வர மறுத்த போலீஸ்-திணறிய கோர்ட் ஊழியர்கள்:
இதற்கிடையே கோவை கோர்ட்டில் தண்டனை விதிக்கப்பட்ட கைதியை அழைத்துச் செல்ல வந்த போலீஸார், கோர்ட்டுக்குள் நுழைய மறுத்து திரும்பச் சென்றதால், கோர்ட் ஊழியர்களை அந்தக் கைதியை சிறைக்குக் கொண்டு சென்றனர்.
கோவையை அடுத்த சோமனூரை சேர்ந்தவர் நந்தகுமார் (வயது). மில் தொழிலாளி. இவர் கருமத்தம்பட்டியை சேர்ந்த ஒரு வீட்டில் தனியாக இருந்த 8 வயது சிறுமியை கற்பழித்தார். இதுதொடர்பாக கருமத்தம்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து நந்தகுமாரை கைது செய்தனர். இவர் மீது கோவை மகளிர் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு கூறப்படும் என்று அறிவிக்கப்பட்டது. எனவே ஜாமீனில் இருந்த நந்தகுமார் கோர்ட்டில் ஆஜராகி இருந்தார். அவருக்கு 10 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து நீதிபதி தட்சிணாமூர்த்தி தீர்ப்பளித்தார். இந்த தண்டனை மதியம் விதிக்கப்பட்டது.
பொதுவாக தண்டனை விதிக்கப்பட்ட கைதியை போலீசார்தான் சிறைக்கு அழைத்துச் செல்வர். அதுபோல நந்தகுமாரை சிறைக்கு கொண்டு செல்ல கோர்ட்டில் இருந்து போலீசாருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் வெகு நேரமாகியும் போலீசார் வரவில்லை.
சென்னை உயர்நீதிமன்ற மோதலைத் தொடர்ந்து நேற்று கோவை கோர்ட்டில் வக்கீல்கள் உண்ணாவிரதம் இருந்தனர். இதையடுத்து கோர்ட்டுக்கு போலீஸார் வரவே இல்லை.
இதையடுத்து ஆயுதப் படை போலீசாருக்கு தகவல் போனது. அவர்கள் மாலை ஐந்தரை மணியளவில் போலீஸார் கோர்ட்டுக்கு வந்தனர். ஆனால் வெளியேயே காத்திருந்தனர். உள்ளே போகவில்லை.
ஆனால் தீர்ப்பு நகல் வர காலதாமதமானது. இதனால் இரவு எட்டரை மணி வரை பொறுத்திருந்த போலீஸார் பின்னர் அங்கிருந்து கிளம்பிச் சென்று விட்டனர்.
இதனால் கைதி நந்தகுமாரை சிறைக்கு அழைத்துச் செல்வதில் சிக்கல் ஏற்பட்டது. போலீஸார் இல்லாததால் வேறு வழியில்லாமல், கோர்ட் அலுவலக உதவியாளர் வெள்ளியங்கிரி மற்றும் ரங்கநாதன் ஆகியோர், கைதியை அழைத்துக் கொண்டு சிறைக்குப் போய் ஒப்படைத்தனர்.
சுப்ரீம் கோர்ட்டு வக்கீல்கள் ஆதரவு:
இதற்கிடையே சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் போராட்டத்துக்கு, உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications