ஒரிரு நாளில் அறிக்கை- நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா
சென்னை: சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்த வழக்கறிர்கள்- போலீஸ் மோதல் தொடர்பாக நேற்று தனது முதல் கட்ட விசாரணையை முடித்த நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா தனது அறிக்கையை ஒரிரு நாட்களில் கூட சமர்ப்பிப்பேன் என்றார்.
சென்னை உயர் நீதிமன்றத்தில் பிப்ரவரி 19ம் தேதி இடையே நடந்த கடும் மோதலில் நீதிபதி உள்பட நூற்றுக்கணக்கான வழக்கறிஞர்கள் காயமடைந்தனர்.
இதுதொடர்பாக விசாரணை நடத்த உச்ச நீதிமன்றம் அதன் முன்னாள் நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா தலைமையில் கமிஷன் ஒன்றை நியமித்தது. ஸ்ரீகிருஷ்ணா சனி மற்றும் ஞாயிறுக்கிழமையில் வக்கீல்கள் மற்றும் போலீஸ் அதிகாரிகளிடம் விசாரணை நடத்தினார்.
சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகையில் நேற்று நடந்த விசாரணையில் நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா போலீஸ் கமிஷ்னரிடம் விசாரணை மேற்கொண்டார்.
மேலும் தாற்காலிகத் தலைமை நீதிபதி எஸ்.ஜே.முகோபாத்யாய, நீதிபதி ஸ்ரீகிருஷ்ணாவிடம் தடியடி சம்பவம் தொடர்பாக விளக்கம் அளித்தார்.
சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் ஆர்.சி.பால்கனகராஜ் கூறுகையில், நீதிபதி ஸ்ரீகிருஷ்ணாவிடம் 2 நாள்களில் 60க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் சாட்சியம் அளித்துள்ளனர். வழக்கறிஞர்களுக்கு நீதி கிடைக்கும் வகையில் ஸ்ரீகிருஷ்ணா அறிக்கைத் தருவார் என்று நம்புகிறோம் என்றார். பால்கனகராஜ்.
கமிஷ்னர் தான் காரணம்...:
போலீஸ் கமிஷனர் கே.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட தங்கள் மீது தடியடி நடத்திய 15 பேர் கொண்ட போலீஸ் அதிகாரிகளின் பட்டியலையும் தமிழ்நாடு வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் எஸ்.பிரபாகரன் நீதிபதியிடம் அளித்தார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில்,
உயர் நீதிமன்றத்தில் போலீசார் தடியடி நடத்தியதற்கு, போலீஸ் கமிஷனர் கே.ராதாகிருஷ்ணன்தான் பொறுப்பு. சென்னை மாநகர போலீஸ் சட்டப்படி, போலீஸ் கமிஷனருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரம் தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, சட்ட விரோதமாக கூடியிருப்பவர்களை கலைப்பதற்கு முன்கூட்டியே அறிவிப்பு செய்த பிறகே, தடியடிக்கு உத்தரவிட வேண்டும். ஆனால், நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்கள் கூடுவது எப்படி சட்ட விரோதமாகும்?.
அவர்கள் மீது தடியடி நடத்துவதற்கு முன்பு எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை போன்ற விவரங்களை நீதிபதி ஸ்ரீகிருஷ்ணாவிடம் தெரிவித்தோம் என்றார் பிரபாகரன்.
தடியடி சம்பவம் தொடர்பாக மாநகர போலீஸ் கமிஷனர் கே.ராதாகிருஷ்ணன், நீதிபதி ஸ்ரீகிருஷ்ணாவிடம் நேற்று இரண்டாவது முறையாக சாட்சியம் அளித்தார்.
அதேபோல், உள்துறைச் செயலாளர் எஸ்.மாலதி, நீதிபதி பிரபா ஸ்ரீதேவன் ஆகியோர் நீதிபதி ஸ்ரீகிருஷ்ணாவை நேற்று சந்தித்தனர்.
சாட்சி அளித்த குழந்தை:
தடியடி சம்பவம் தொடர்பாக வழக்கறிஞர் ரேவதி மற்றும் அவரது 8 வயது மகள் ஆர்த்தி ஆகியோர் நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா முன்னிலையில் சாட்சியம் அளித்தனர்.
தடியடி சம்பவத்தில் காயமடைந்த வழக்கறிஞர்கள் திரளாக வந்து நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா முன்னிலையில் ஞாயிற்றுக்கிழமை சாட்சியம் அளித்தனர். இவர்களில் பலர் கையோடு கொண்டு வந்திருந்த மனுக்களையும் அளித்தனர்.
சென்னை உயர் நீதிமன்றத்தில் வக்கீல்கள் தாக்கப்பட்ட வழக்கில் சி.பி.ஐ. அதிகாரிகள் நேற்று ஆதாரங்களை சேகரித்தனர். இதற்காக சிபிஐ எஸ்.பி. ரகு தலைமையிலான 45 சி.பி.ஐ. அதிகாரிகள் உயர் நீதிமன்றத்துக்கு வந்தனர்.
விசாரணையில் திருப்தியில்லை:
இச்சம்பவத்தில் படுகாயமடைந்து சென்னை உயர் நீதிமன்ற வக்கீல் சங்கச் செயலாளர் மோகனகிருஷ்ணன் விசாரணைக்கு சென்று வந்த பின் கூறுகையில், நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா முழு மனதோடு என்னிடம் விசாரணை நடத்தவில்லை. இந்த விசாரணையில் திருப்தியில்லை என்றார்.
இச்சம்பவம் தொடர்பாக நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா, தனது முதல் கட்ட விசாரணையை முடித்தநிலையில் நிருபர்களிடம் கூறுகையில்,
உச்ச நீதிமன்றம் இடைக்கால அறிக்கையை ஒரு வாரத்துக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளது.
என்னிடம் அளிக்கப்பட்டுள்ள ஆதாரங்களை ஆய்வு செய்த பிறகே, இடைக்கால அறிக்கையைத் தாக்கல் செய்ய முடியும். அதற்கு எவ்வளவு காலம் ஆகும் என்று தெரியவில்லை. ஓரிரு நாள்களில் கூட அறிக்கை சமர்ப்பிக்கப்படலாம் என்றார் நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா.