அதிமுகவுடன் கூட்டணி-ஜெ ஆதரவு காங் நிர்வாகிகள் கோரிக்கை
சென்னை: மக்களவைத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்று சில ஜெயலலிதா ஆதரவு காங்கிரஸ் நிர்வாகிகள் வைத்த கோரிக்கைகை தமிழகத்துக்கான காங்கிரஸ் தேர்தல் பொறுப்பாளர் குலாம் நபி ஆசாத் நிராகரித்துவிட்டார்.
மக்களவைத் தேர்தல் குறித்து சத்தியமூர்த்தி பவனில் அவர் காங்கிரஸ் நிர்வாகிகள், எம்பி்க்கள், எம்எல்ஏக்களுடன் ஆலோசனை நடத்தினார்.
இதில் மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், ஜவுளித்துறை இணையமைச்சர் இளங்கோவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அப்போது 2004 தேர்தலில் தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 40 தொகுதிகளில் திமுக 16 தொகுதிகளிலும், காங்கிரஸ் 10 இடங்களிலும் போட்டியிட்டது.
கடந்த முறை கூட்டணியில் இருந்த மதிமுக, இடதுசாரிகள் இப்போது கூட்டணியில் இல்லை. இந்தக் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட 8 இடங்கள் இப்போது மீதமுள்ளன. இதி்ல் 5 இடங்களை காங்கிரஸ் கோர வேண்டும் என ஆசாத்திடம் பல்வேறு நிர்வாகிகளும் வலியுறுத்தினர்.
அதாவது காங்கிரஸ் கட்சிக்கு 15 தொகுதிகளைக் கேட்க வேண்டும் என்றனர்.
இது குறித்து இளங்கோவன் கூறுகையில், காங்கிரஸ் கட்சி இம்முறை கூடுதல் தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என்பது தமிழக காங்கிரஸ் தொண்டர்களின் உணர்வு. இதை கட்சியின் மேலிடம் பரிசீலிக்கும் என்றார்.
ஜெயலலிதா ஆதரவாளர்களான சில நிர்வாகிகள், .திமுகவுடன் கூட்டணி சேருவதை விட அதிமுகவுடன் கூட்டணி சேருவது சரி என்றனர். ஆனால், இதை ஆசாத் உடனடியாக நிராகரித்துவிட்டார்.
மேலும் சில நிர்வாகிகள் கூட்டணியில் எக்காரணம் கொண்டும் விடுதலைச் சிறுத்தைகளைச் சேர்க்கக் கூடாது என திமுகவை நிர்பந்திக்க வேண்டும் என்றனர்.