மே 15 வரை மின்வெட்டு: ஆற்காடு வீராசாமி அறிவிப்பு
சென்னை: தமிழகத்தில் கோடைகாலத்தில் மின்வெட்டு இருக்கும். மே மாதம் 15ம் தேதிக்குப் பிறகு, காற்றாலைகள் மூலம் மின் உற்பத்தி தொடங்கும். அதன்பின், வீடுகள் மற்றும் தொழிற்சாலைகளுக்கு மின் வெட்டில் இருந்து விலக்கு தரப்படும் என மின்சாரத் துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி தெரிவித்துள்ளார்.
அவர் கூறுகையில்,
மே மாதம் 15ம் தேதி வரை... தமிழகத்தில் ஆயிரம் மெகா வாட் வரை மின் பற்றாக்குறை நிலவுகிறது. மே மாதம் 15ம் தேதிக்குப் பிறகு, காற்றாலைகள் மூலம் மின் உற்பத்தி தொடங்கும். அதன்பின், வீடுகள் மற்றும் தொழிற்சாலைகளுக்கு மின் வெட்டில் இருந்து விலக்கு தரப்படும்.
மின் தட்டுப்பாடு காரணமாக, கோடை காலத்திலும் மின் வெட்டு இருக்கும். தற்போது, வெளி மாநிலங்களில் இருந்து ஒரு யூனிட் மின்சாரம் ரூ. 7 முதல் 8 வரை விலைக்கு வாங்கப்படுகிறது. கோடை காலத்தில் மின்சாரத்துக்கு கிராக்கி ஏற்படுவதால், வட மாநிலங்கள் அதை அதிக விலைக்கு விற்கின்றன.
ஒரு யூனிட்டுக்கு ரூ. 9 வரை கேட்கிறார்கள். ஆனாலும், கோடையில் மின் வெட்டு இல்லாமல் செய்ய 500 மெகா வாட் மின்சாரத்தை வட மாநிலங்களில் இருந்து வாங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
கம்பிகளில் மின்சாரம் கொண்டு செல்லப்படுவதன் மூலம், 18 சதவீதம் மின் இழப்பு ஏற்படுகிறது. இதைக் குறைக்க மத்திய அரசு மூலம் தனியான திட்டத்தை செயல்படுத்த மின்சார வாரியம் கடிதம் எழுதியது. அதன்படி, 650 கோடி ரூபாயை மத்திய அரசு ஒதுக்க உள்ளது. இம்மாதம் அல்லது ஏப்ரலில் இந்த நிதி கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம்.
விவசாயம் மற்றும் வீடுகளுக்கு அளிக்கப்படும் மின்சாரத்தை தனித் தனி கம்பிகளில் கொடுப்பதன் மூலம், மின் இழப்பை 18 லிருந்து 15 சதவீதமாகக் குறைக்க முடியும். திருநெல்வேலி, கோவை, ஈரோடு மாவட்டங்களில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. ஓரிரு மாதங்களில் இந்தப் பணி தொடங்கும் என்றார் ஆர்க்காடு.