சிவகங்கையில் ப.சிதம்பரம் 'ரொம்ப ஸ்டிராங்'!
அவர் இன்னும் வேட்பாளராகவோ, இந்தத் தொகுதியில் காங்கிரஸ் போட்டியிடும் என்றோ அறிவிக்கப்படாத நிலையில் அவரது ஆதரவாளர்கள் சிவகங்கை தொகுதி முழுவதும் சுவர்களில் சிதம்பரத்தின் பெயரை ஆரம்பித்துவிட்டனர்.
கடந்த தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட ப.சிதம்பரம், அதிமுக வேட்பாளர் சுப.கருப்பையாவை தோற்கடித்தார்.
கடந்த 4 ஆண்டுகளாக நிதியமைச்சராக இருந்த சிதம்பரம் தனது தொகுதியை மறக்கவில்லை. நாட்டின் அனைத்து பொதுத் துறை வங்கிகளின் கிளைகளையும் சிவகங்கையில் திறக்கச் செய்தார்.
இந்த வங்கிகள் மூலம் ஆயிரக்கணக்கான விவசாயிகளுக்கு கடன்கள் அள்ளித் தரப்பட்டுள்ளன. மேலும் இத் தொகுதியின் ஆயிரக்கணக்கான மாணவ, மாணவியருக்கு கல்விக் கடன்களும் இந்த வங்கிகளால் வாரித் தரப்பட்டுள்ளன.
கடன் தர மறுத்தால் சிதம்பரத்திடம் சொல்வேன் என்று லேசாக மிரட்டினாலே மாணவ, மாணவியருக்கு கடன் கிடைக்கும் நிலை உள்ளது சிவகங்கை பொதுத்துறை வங்கிகளில்.
மேலும் ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தை இந்தத் தொகுதியில் மிகத் தீவிரமாகவே அமல்படுத்தினார் சிதம்பரம். இதன்மூலம் வேலைவாய்பபில்லாத லட்சகக்கணக்கானோருக்கு வேலை கிடைத்துள்ளது.
மேலும் தொகுதியின் நலத் திட்டப் பணிகள், தொண்டர்களை கவனிப்பது ஆகிய பணிகளை சிதம்பரத்தின் மகன் கார்த்தி செய்து வந்திருக்கிறார். இதனால் சிதம்பரம் இங்கு நல்ல பலத்துடனே உள்ளார்.
இதனால் வரும் மக்களவைத் தேர்தலில் சிதம்பரம் இங்கு தான் போட்டியிடுவார் என்று காங்கிரஸ்-திமுக தொண்டர்களை விட அதிமுகவினரே நிச்சயமாக எதிர்பார்க்கின்றனர்.
அவரை எதிர்த்து பலமாக ஒரு வேட்பாளரை நிறுத்த வேண்டிய நிலையி்ல் அப்படி ஒருவரை தேடிக் கண்டுபிடிக்கும் வேலையில் அதிமுக இறங்கியுள்ளது.
சமீபத்தில் திமுகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்த ராஜ கண்ணப்பன், இந்தத் தொகுதியில் நிறுத்தப்பட்டாலும் ஆச்சரியமில்லை என்கின்றனர். ஏகப்பட்ட பணம் வைத்திருக்கும் கண்ணப்பனால் தான் சிதம்பரத்தின் பாப்புலாரிட்டியை சமாளிக்க முடியும் என்று ஒரு தரப்பு அதிமுகவினர் கூறுகின்றனர்.
ஆனால், யார் வந்தாலும் சிதம்பரத்தை அசைக்க முடியாது என்கின்றனர் காங்கிரசார். இத்தனைக்கும் 1999ம் ஆண்டில் காங்கிரஸில் இருந்து விலகியிருந்த நிலையில் காங்கிரஸ் வேட்பாளர் சுதர்சன நாச்சியப்பனிடம் தோற்றவர் தான் சிதம்பரம்.
ஆனால், வழக்கம்போல் 'டெல்லி அரசியல்' நடத்தாமல், இம்முறை தொகுதியில் அடிக்கடி வலம் வந்து ஏகப்பட்ட வேலைகளை செய்துள்ளதால் தொகுதி அவரை காப்பாற்றிவிடும் என்கிறார்கள் காங்கிரசார்.
சிதம்பரத்தின் தேர்தல் பணிகளை இப்போதே ஆரம்பி்த்துவிட்டார் அவரது மகன் கார்த்தி.