டோணிக்கு மிரட்டல் கடிதம் அனுப்பியவர் கைது
புவனேஸ்வர்: இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் டோணிக்கு ரூ. 50 லட்சம் கேட்டு மிரட்டல் கடிதம் அனுப்பியவரை நேற்று ஒரிசா போலீசார் கைது செய்தனர்.
இந்திய கேப்டன் டோணிக்கு கடந்த மாதம் டிசம்பரில் அடுத்தடுத்து இரண்டு மிரட்டல் கடிதம் வந்தன. அதில் ரூ. 50 லட்சம் கொடுக்குமாறும் இல்லையென்றால் அவரது வீட்டை வெடிகுண்டு வைத்து தகர்த்துவிடுவோம் என்று கூறப்பட்டிருந்தது.
இதையடுத்து டோணியின் தந்தை பான் சிங், ராஞ்சியிலுள்ள ஜெகநாத்பூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இதையடுத்து போலீசார் எப்ஐஆர் பதிவு விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில் இந்த மிரட்டல் கடிதம் அனுப்பியவர் யார் என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து முகமது தஸ்லீம் என்ற குற்றவாளியை ஒரிசா போலீசார் நேற்று புவனேஸ்வரில் கைது செய்தனர். இவர் மீது ஏற்கனவே பல கொலை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இது குறித்து ராஞ்சி போலீஸ் சூப்பிரடன்ட் ரிச்சர்ட் லக்ரா கூறுகையில், ராஞ்சி போலீசார் விரைவில் புவனேஸ்வர் செல்கின்றனர். ஒரிசா போலீசார் அவர்களிடம் முகமது தஸ்லீமை ஒப்படைப்பார்கள் என்றார்.
இது குறித்து முகமது தஸ்லீமின் அண்ணன் கூறுகையில், நேற்று மாலை 4.30 மணி அளவில் போலீசார் அவனை கைது செய்தனர். அவன் மீது டெல்லியில் ஒரு கொலை வழக்கு இருப்பதாகவும், புவனேஸ்வரத்தில் ஒரு கடத்தல் வழக்கு இருப்பதாகவும் தெரிவித்தனர்.
அவன் தற்போது எந்த வழக்கில் கைது செய்யப்படுகிறான் என்பது தெரியாது. எனது பாதுகாப்பிற்காக எனக்கு தெரிந்த உண்மைகளை போலீசிடம் நானாக வலிய சென்று தெரிவித்துள்ளேன். அவன் போலீ்ஸ் பிடியில் இருந்தால் தான் எனக்கு நிம்மதி என்றார்.