ஜெ. உண்ணாவிரதப் போராட்டத்திற்கு கம்யூ. கட்சிகள் ஆதரவு
சென்னை: அதிமுக பொதுச் செயலாளரின் உண்ணாவிரத அறிவிப்புக்கு இடதுசாரிக் கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.
இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா உண்ணாவிரதம் இருக்கப் போவதாக அறிவித்துள்ளார்.
இதை இரு கம்யூனிஸ்ட் கட்சிகளின் தலைவர்களும் வரவேற்றுள்ளனர்.
இதுகுறித்து மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் வரதராஜன் கூறுகையில்,
இலங்கையில் தமிழர்கள் கொல்லப்படுவதை கண்டித்து அ.தி.மு.க. சார்பில் 10-ந் தேதி உண்ணாவிரத போராட்டம் நடத்த இருப்பதாக ஜெயலலிதா அறிவித்திருக்கிறார். இதை நாங்கள் வரவேற்கிறோம். இந்த உண்ணாவிரதத்துக்கு முழு ஆதரவு கொடுப்போம் என்றார்.
அதேபோல இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் தா.பாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்-அமைச்சருமான ஜெயலலிதா, போரை நிறுத்த கோரி வற்புறுத்திட மார்ச் 10-ந் தேதி உண்ணாவிரத போராட்டம் நடத்திட அழைப்பு விட்டதோடு, தானும் உண்ணாவிரதப்போராட்டத்தில் பங்கேற்பதாக அறிவித்திருப்பது, கொடுமைக்கு ஆளாகி உயிருக்காக போராடி வரும் இலங்கை தமிழ் மக்களுக்கு ஆறுதலையும் அளிக்கிறது.
மேலும், இந்திய தமிழர்களுக்கு ஊக்கத்தையும், மகிழ்ச்சியை தருவதாக இருப்பதால் இப்போராட்ட அறிவிப்பை இந்திய கம்யூனிஸ்டு கட்சி முழு மனதோடு வரவேற்பதோடு, இப்போராட்டத்திற்கு முழு ஒத்துழைப்பும், ஆதரவும் தரும் என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications