வேலூர், ராமநாதபுரத்தில் இந்திய தேசிய லீக் போட்டி
மதுரை: நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் வேலூர் - ராமநாதபுரம் தொகுதிகளை கேட்டு போட்டியிடுவோம் என்று இந்திய தேசிய லீக் மாநிலத் தலைவர் எம். பஷீர் அஹமது தெரிவித்துள்ளார்.
மதுரையில் தேசிய லீக் மாநில செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது.
செயற்குழு கூட்டத்திற்கு பின்பு, மாநிலத் தலைவர் எம். பஷீர் அஹமது செய்தியாளர்களிடம் கூறுகையில்,
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் முஸ்லிம் மக்களுக்கு இடஒதுக்கீடு அளிப்பேன் என்று கூறிய காங்கிரஸ் கட்சி ஏமாற்றி விட்டது.
தமிழ்நாட்டில் முஸ்லிம்களுக்கு 3.5 சதவீத இடஒதுக்கீடு முழுமையாக அமுல்படுத்தப்படவில்லை. முஸ்லிம்களின் எண்ணிக்கைக்கேற்ப இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும்.
தமிழக அரசு அமைத்த உருது முஸ்லிம் ஆணையம் முறையாக செயல்படவில்லை. அதே போன்று மூன்று ஆண்டுகளாகியும் உலமாக்கள் நலவாரியம் செயல்படவில்லை.
கடந்த சட்டமன்றத் தேர்தலில் தேசிய லீக்கிற்கு வாணியம்பாடி, பாளையங்கோட்டை அதிமுக அணியில் ஒதுக்கப்பட்டது.
அது போல வரும் நாடாளுமன்றத் தேர்தலில் வேலூர் அல்லது ராமநாதபுரம் தொகுதியை அதிமுக கூட்டணியில் கேட்டு அங்கு போட்டியிடுவோம் என்றார்.