ஸ்ரீபெரும்புதூர் கேட்கும் டி.ஆர்.பாலு: நீலகிரி-பெரம்பலூருக்கு ஆ.ராசா மனு
சென்னை: லோக்சபா தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட சீட் கேட்டு 1700 பேர் விருப்ப மனுக்கள் தாக்கல் செய்துள்ளனர்.
லோக்சபா தேர்தலில் போட்டியிட விரும்பும் திமுகவினரிடமிருந்து கடந்த 5ம் தேதி முதல் விருப்ப மனுக்கள் பெறப்பட்டன. நேற்றுடன் விண்ணப்ப படிவங்களை வாங்குவதற்கும், வழங்குவதற்கும் கெடு முடிந்தது.
கடைசி நாளான நேற்றுடன் கிட்டத்தட்ட 1700 மனுக்கள் வந்துள்ளதாக தெரிகிறது.
கடைசி நாளாக நேற்று மத்திய அமைச்சர்கள் டி.ஆர்.பாலு, ஆ.ராசா ஆகியோர் மனு தாக்கல் செய்தனர்.
அழகிரிக்காக 140 பேர் மனு
மதுரையில் மு.க.அழகிரி போட்டியிட 140 பேர் மனு செய்துள்ளனர்.
வடசென்னையில் போட்டியிட செ.குப்புசாமி எம்.பி., சிங்கார ரத்னசபாபதி, முன்னாள் அமைச்சர் சற்குண பாண்டியன் ஆகியோர் விண்ணப்பித்துள்ளனர்.
தயாநிதிக்காக 5 மனுக்கள்
மத்திய சென்னையில் போட்டியிட தயாநிதிமாறன் எம்.பி. பெயரில் 5 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
தென்சென்னையில் போட்டியிட நடிகர் நெப்போலியன், டி.கே.எஸ். இளங்கோவன், மு.க.ஸ்டாலின் மகன் உதயநிதிக்காக சென்னை மாநகராட்சி மண்டல குழு தலைவர் கே.தனசேகரன் மனு தாக்கல் செய்துள்ளார்.
ஸ்ரீபெரும்புதூர் கேட்கும் டி.ஆர்.பாலு
ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் போட்டியிட டி.ஆர்.பாலு மனு கொடுத்துள்ளார்.
வேலூர் தொகுதியில் போட்டியிட அமைச்சர் துரைமுருகனின் சகோதரர் துரை சிங்காரம், கிருஷ்ணகிரி தொகுதிக்கு சுகவனம் எம்.பி., நீலகிரி மற்றும் பெரம்பலூர் தொகுதிக்கு மத்திய அமைச்சர் ஆ.ராசா, திருச்சிக்கு மத்திய மந்திரி ரகுபதி, தஞ்சாவூருக்கு மத்திய மந்திரி பழனி மாணிக்கம் ஆகியோர் மனு தாக்கல் செய்துள்ளனர்.
ராமநாதபுரம் கேட்கும் ரித்தீஷ்
ராமநாதபுரத்தில் தமிழச்சி தங்கபாண்டியன், நடிகர் ரித்தீஷ், தூத்துக்குடி தொகுதிக்கு மாவட்ட செயலாளர் பெரியசாமி மகன் ஜெகன்.
திருநெல்வேலிக்கு மத்திய அமைச்சர் ராதிகா செல்வி, கருப்பசாமி பாண்டியன் மகன் வி.கே.பி.சங்கர் ஆகியோர் விண்ணப்பித்துள்ளனர்.
விருப்ப மனுக்கள் தாக்கல் செய்துள்ளோரிடம் வருகிற 25ம் தேதி நேர்காணல் நடைபெறுகிறது. முதல்வர் கருணாநிதி முன்னிலையில் நடைபெறும் இதில், பொதுச் செயலாளர் அன்பழகன், பொருளாளர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் அடங்கிய குழு நேர்காணல் நடத்துகிறது.