புட்டபர்த்தியில் சாய் பாபாவை சந்தித்த ஸ்டாலின்
சென்னை: புட்டபர்த்திக்குச் சென்று சாய்பாபாவை சந்தித்துள்ளார் தமிழக உள்துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின். இந்த சந்திப்பு குறித்த விவரம் வெளியிடப்படவில்லை.
தெலுங்கு கங்கை திட்டத்தின் கீழ் ஆந்திராவிலிருந்து சென்னைக்கு போடப்பட்டுள்ள கால்வாயை சீரமைத்துக் கொடுத்தார் சாய்பாபா.
இதற்காக சென்னையில் பாராட்டு விழா நடைபெற்றது. அதில் முதல்வர் கருணாநிதி கலந்து கொண்டார். பின்னர் முதல்வரின் வீட்டுக்குச் சென்று முதல்வர் குடும்பத்தினருக்கு ஆசிர்வாதம் வழங்கினார் சாய்பாபா.
சென்னை பாராட்டு விழாவின்போது கூவம் நதியை தூய்மையாக்கும் திட்டத்திற்கும் உதவிட வேண்டும் என பாபாவுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது.
இதுதொடர்பாக கடந்த ஆண்டு புட்டபர்த்தி சென்ற பொதுப்பணித் துறை அமைச்சர் துரைமுருகன், உள்ளாட்சி அமைச்சர் ஸ்டாலின் ஆகியோர், கூவம் திட்டம் குறித்து, சாய்பாபாவிடம் பேசினர்.
இதை மீண்டும் வலியுறுத்த, கடந்த மாதம் புட்டபர்த்தி செல்ல இருந்தனர். அப்போது முதல்வர் கருணாநிதிக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டி இருந்ததால், பயணத் திட்டம் தள்ளி வைக்கப்பட்டது.எனவே, அமைச்சர்கள் ஸ்டாலினும், துரைமுருகனும் நேற்று முன்தினம் தனியார் விமானம் மூலம் புட்டபர்த்தி சென்றனர். சாய்பாபாவை சந்தித்துவிட்டு, நேற்று காலை திரும்பினர்.
பாபாவுடன் பேசியது குறித்த விவரங்களை தமிழக அரசு வெளியிடவில்லை.
மீண்டும் தேர்தல் ஆணைய சிக்கலில் ஸ்டாலின்:
இதற்கிடையே நகராட்சி பள்ளி மாணவர்களுக்கு ரூ. 30 கோடி மதிப்பிலான மருத்துவ இன்சூரன்ஸ் திட்டத்தை அறிவித்துள்ளார் உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின். இதுகுறித்து தேர்தல் ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது.
சில மாதங்களுக்கு முன்பு திருமங்கலத்தில் நடந்த சட்டசபை இடைத் தேர்தல் பிரசாரத்தின்போது வாக்காளர்களுக்குப் பணம் கொடுத்ததாக சிக்கலில் மாட்டினார் மு.க.ஸ்டாலின். இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்ய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. அதன் பேரில் வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் மீண்டும் ஒரு சிக்கலில் மாட்டியுள்ளார் ஸ்டாலின். நேற்று சென்னையில் நடந்த நிகழ்ச்சியில், அவர் நகராட்சி, மாநகராட்சி பள்ளி மாணவ, மாணவியருக்கு ரூ. 30 கோடி மதிப்பிலான மருத்துவ இன்சூரன்ஸ் திட்டத்தை அறிவித்தார்.
இது வாக்காளர்களைக் கவரும் வகையிலான அறிவிப்பு என்று கூறியுள்ள தேர்தல் ஆணையம், இதுகுறித்து விசாரிக்க உத்தரவிட்டுள்ளது.
ஆனால் இதை ஸ்டாலின் மறுத்துள்ளார். நான் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் அந்தத் திட்டம் அறிவிக்கப்பட்டது. நான் வெறுமனே அந்த நிகழ்ச்சியில் பங்கேற்க மட்டுமே செய்தேன் என்று அவர் கூறியுள்ளார்.
இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தது கிருஷ்ணகிரியைச் சேர்ந்த ஸ்ரீ பர்ஸ்வா பத்மாவதி சக்தீபிடம். அந்த அமைப்பின் தலைவரான ஸ்ரீ ஸ்ரீ வசந்த் குருதேவ் கூறுகையில், இது முற்றிலும் எங்களது நிறுவனத்தின் நிகழ்ச்சி. எங்களது ஆதரவாளர்கள், எங்களது ஸ்பான்சர்கள் அறிவித்த திட்டம் இது என்று அவர் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications