விதவையிடம் ஈவ்-டீசிங் செய்த இருவர் கைது
நாகர்கோவில்: நாகர்கோவிலில் விதவை பெண்ணை ஈவ்டீசிங் செய்த இரண்டு வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
திருவட்டாரை அடுத்த இட்டகவேலியை சேர்ந்த நடராஜன் என்பவரின் மனைவி பிரேமா (30). சமீபத்தில் நடராஜன் இறந்து போனதையடுத்து பிரேமா அருகில் இருந்த பள்ளிகூட சத்துணவு மையத்தில் சமையலர் வேலை பார்த்து வருகிறார்.
இவர் வேலைக்கு போகும் போது அந்தப் பகுதியைச் சேர்ந்த சஜி (23), விஜய் (24), லியோராஜ் (23), சுரேஷ் (25) ஆகியோர் அவரை கேலி செய்து வந்தனர்.
இவர்களது தொல்லை தொடர்ந்து அதிகரித்ததை அடுத்து பிரேமா அவர்களை எச்சரித்துள்ளார். ஆனாலும் அவர்கள் திருந்தவில்லை. இந்நிலையில் சில நாட்களுக்கு முன் அவரிடம் நான்கு பேரும் அவரிடம் ஆபாசமாக பேசியுள்ளனர்.
இதையடுத்து பிரேமா திருவட்டார் போலீசில் கண்ணீருடன் புகார் செய்தார். போலீசார் ஈவ் டீசிங் வழக்கு பதிவு செய்து லியோராஜ் மற்றும் சுரேஷ் ஆகியோரை கைது செய்தனர். தலைமறைவாகிவிட்ட மற்ற இரண்டு பேரையும் போலீசார் தேடி வருகின்றனர்.