கடன் தொல்லையால் 1.83 லட்சம் விவசாயிகள் தற்கொலை- நம்மாழ்வார்
மதுரை: கடன் தொல்லை தாங்காமல் நாட்டில் 1.83 லட்சம் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர் என இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் தெரிவித்துள்ளார்.
மதுரையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் கலந்து கொண்டு கூறுகையில்,
நாடு சுதந்திரம் பெற்று 60 ஆண்டுகள் ஆகியும் முறையான உணவுக் கொள்கை வகுக்கப்படவில்லை. கடந்த 10 ஆண்டுகளில் கடன் தொல்லை தாங்க முடியாமலும், அநியாய வட்டி கொடுத்து மீள முடியாமலும், நாட்டில் சுமார் ஒரு லட்சத்து 83 ஆயிரம் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
இயற்கை விவசாயத்துக்கு மாறுங்கள்...
இது வேதனை தரும் செய்தியாகும். விவசாயிகள் தற்கொலை நாட்டிற்கு மிக பெருத்த அவமானம் ஆகும். இயற்கை விவசாயத்தை மறந்து, இரசாயன விவசாயத்திற்கு மாறி, பயிர்களுக்கு பூச்சி மருந்து அடிப்பதால் பயிர்களை விஷத்தன்மை தாக்குகிறது.
இதனால் உணவுக்கு செலவழிப்பதை விட அதிகமாக மருத்துவத்திற்கு செலவழிக்க வேண்டியுள்ளது. ரசாயன உரங்களை போட்டு விவசாயம் செய்வதால் நமது நிலத்தில் பாதி பயனற்றதாகி விட்டது.
இதனால் சிறுநீரக பாதிப்பு, மஞ்சள் காமாலை போன்ற நோய்கள் ஏற்படுகின்றன. எனவே நமது விவசாயிகள் இயற்கை விவசாயத்திற்கு முழுமையாக மாற வேண்டும் என்றார் நம்மாழ்வார்.