நெல்லையில் 21 வாக்கு சாவடிகள் இடம் மாற்றம்?
நெல்லை: நெல்லை மாவட்டத்தில் பழுதடைந்த 21 வாக்கு சாவடிகளை வேறு இடத்துக்கு மாற்ற தேர்தல் ஆணையத்துக்கு பரிந்துரை செய்திருப்பதாக அம்மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற பணிகள் தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளின் ஆலோசனை கூட்டம் நெல்லையில் நடந்தது. கலெக்டர் பழனியாண்டி தலைமை வகித்தார். டிஐஜி கண்ணப்பன், போலீஸ் கமிஷனர் மஞ்சுநாதா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் கலந்து கொண்ட கலெக்டர் பழனியாண்டி பேசுகையில்,
தேர்தல் ஆணையத்தின் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் வழங்கப்பட்டுள்ளது. நெல்லை மாவட்டத்தில் 21 வாக்கு சாவடிகளின் கட்டிடங்கள் பழுதடைந்துள்ளன. இந்த வாக்கு சாவடிகளை வேறு இடத்திற்கு மாற்ற உத்தேசிக்கப்பட்டு அதன் விவரங்கள் தேர்தல் ஆணையத்திற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளன.
அரசியல் கட்சிகள் தேர்தல் விதிமுறைகளின்படி கூட்டங்கள், ஊர்வலங்கள் நடத்துவதுடன், பொதுவான நன்னடத்தை விதிகளை பின்பற்ற வேண்டும்.
தனியார் இடங்கள், பொது இடங்கள், அரசு கட்டிடங்கள், அரங்கங்கள், மற்றும் பிரசாரம் சம்பந்தப்பட்ட இடங்களிலும், தொலைக்காட்சி, தொலைக்காட்சி தொடர், வானொலி மூலம் பிரச்சாரம் செய்யும் போதும் தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும்.
தேர்தல் அமைதியான முறையிலும், நேர்மையான முறையிலும் நடக்க அனைவரும் முழு ஓத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றார் கலெக்டர் பழனியாண்டி.