பாஜக சர்வே..காங்கிரஸைவிட தே.ஜ.கூ. முன்னணி
டெல்லி: ஐக்கிய முற்போக்குக் கூட்டணி நாளுக்கு நாள் வேகமாக சுருங்கி வருவது பாஜக கூட்டணிக்கு லேசான பலத்தைக் கொடுத்துள்ளது. ஐக்கிய முற்போக்குக் கூட்டணியை விட தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு ஓரளவு ஆதரவு பெருகியிருப்பதாக பாஜக நடத்திய சர்வேயில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேசமயம், ஐக்கிய முற்போக்குக் கூட்டணியிலிருந்து பல கட்சிகள் வெளியேறியுள்ள போதிலும் கூட அக்கூட்டணிக்கு பெருத்த அடி கிடைக்காது என்பதையும் பாஜக நடத்திய சர்வே தெளிவாக்குகிறது.
காங்கிரஸ் கட்சிக்கு இம்முறை 135 இடங்கள் கிடைக்கலாம் என பாஜக சர்வேயில் தெரிய வந்துள்ளதாம். கடந்த 2004ம் ஆண்டு நடந்த தேர்தலில் காங்கிரஸ் 145 இடங்களில் வெற்றி பெற்றது.
ஆந்திராவில் காங்கிரஸ் கூட்டணிக்கு நல்ல வெற்றி வாய்ப்பு உள்ளதாம். அங்கு 25 இடங்கள் வரை கிடைக்குமாம்.
பாஜகவுக்கு 160 இடங்கள் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உ.பியில் அதிக இடம் கிடைக்கும் என்கிறது இந்த சர்வே.
பாஜகவுக்காக இந்த சர்வேயை நடத்திய ஜி.வி.எல். நரசிம்ம ராவ் கூறுகையில், 300 இடங்களில் இரு தேசிய கட்சிகளும் (காங்கிரஸ், பாஜக) வெற்றி பெறும் வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன. இந்த 300 இடங்களில் யார் அதிக இடங்களில் வெல்கிறார்களோ, அதன் அடிப்படையில்தான் யார் ஆட்சி அமைப்பது என்பது அமையும் என்றார்.
2 நாட்களுக்கு முன்புதான் இந்த சர்வே முடிவுகள் அத்வானியிடம் அளிக்கப்பட்டதாம்.
பாஜக நடத்திய கருத்துக் கணிப்பில், ஹரியானாவில் அக்கட்சிக்கு நல்ல வாய்ப்புகள் உள்ளன. பஞ்சாப், ராஜஸ்தானில் கெளரவமான இடங்கள் கிடைக்கும். இங்கெல்லாம் பாஜக சற்று போராட வேண்டியிருக்கும்.
அதேசமயம், மத்தியப் பிரதேசம், கர்நாடகா, சட்டீஸ்கர், ஜார்க்கண்ட், மகாராஷ்டிரா, குஜராத், அஸ்ஸாம் ஆகிய மாநிலங்களில் சற்று கவனமாக இருக்க வேண்டியிருக்கும்.
உ.பியைப் பொறுத்தவரை பாஜகவுக்கு 20 இடங்கள் கிடைக்கும் என நரசிம்மராவ் சர்வே கூறுகிறது. அதேசமயம், இதில் மாற்றமும் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன.
உ.பியில் காங்கிரஸ் கட்சி நன்கு வளர்ந்துள்ளது. ஆனால் சீட் கிடைப்பது கஷ்டம் என்கிறது பாஜக கருத்துக் கணிப்பு.
உ.பி. முஸ்லீம் வாக்குகளை முலாயம் சிங் யாதவும், காங்கிரஸும் இணைந்திருந்தால் ஒன்றாக கைப்பற்றியிருக்கலாம். ஆனால் தற்போது இந்த வாக்குகள் காங்கிரஸுக்கு போவதை விட முலாயம், மாயாவதியிடம் பிரிந்து போகும் வாய்ப்புகள் அதிகம் உள்ளனவாம்.
அதேபோல, பீகாரில், காங்கிரஸ் கூட்டணியில் இல்லாததால், அது பாஜகவுக்கு சாதகமாக அமைந்துள்ளதாம். அங்குள்ள முஸ்லீம் வாக்குகள் சிதறும் வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளன. இதனால் காங்கிரஸுக்கு ஒட்டுமொத்தமாக வர வேண்டிய வாக்குகள், பாஸ்வான், லாலு கட்சிகளுக்குப் பிரிந்து போகிறது. இது பாஜகவுக்கு சாதகமாக அமையும்.
ஒரிசாவில் காங்கிரஸுக்கு சற்று பலன் கிடைக்கலாம். ஆனால் அதை உறுதியாக சொல்ல முடியாது என்கிறது பாஜக.
இந்தக் கருத்துக் கணிப்பின் முக்கிய அம்சமே, தேர்தலுக்குப் பின்னர் அமையப் போகும் கூட்டணி குறித்துத்தான். தென் இந்தியாவில் பாஜகவுக்கு எங்குமே தோழமைக் கட்சிகள் கிடையாது. தமிழகம், கர்நாடகம், கேரளம், ஆந்திரம என அனைத்து தென் மாநிலங்களிலும் அது தனித்துப் போட்டியிடுகிறது அல்லது கதைக்கு உதவாத குட்டிக் கட்சிகளுடன் கை கோர்த்துள்ளது.
இது தேர்தலுக்குப் பின்னர் பாஜகவுக்கு பாதகத்தை ஏற்படுத்தும்.
தேர்தலுக்குப் பிந்தைய கூட்டணிகளை எதிர்பார்க்காமல், பெருமளவிலான சீட்களை பாஜக கைப்பற்றியாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. மேலும், தேர்தலுக்குப் பின்னர் அதிமுக, தெலுங்குதேசம் போன்ற கட்சிகளை ஈர்த்தாக வேண்டும்.
ஒட்டுமொத்தமாக தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு 217 இடங்கள் கிடைக்கும் என பாஜக நடத்திய கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது மெஜாரிட்டிக்கு 50 இடங்கள் குறைவாகும்.
ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்கு 180 இடங்களுக்குள் கிடைக்கலாம்.
இந்த இரு கூட்டணிகளுக்கும் மிகப் பெரிய மிரட்டலாக 3வது அணி திகழும் என்கிறது இந்த கருத்துக் கணிப்பு. அவர்களுக்கு கணிசமான இடங்கள் கிடைப்பது இரு அணிகளுக்கும் நிச்சயம் நல்லதல்ல என்கிறது இந்த கருத்துக் கணிப்பு.