தாவூத் மிய்யாகான் வகையறாக்கள்..ஐயுஎம்எல் எச்சரிக்கை
சென்னை: சந்தர்ப்பவாத பாமகவுக்கு தமிழக மக்கள் லோக்சபா தேர்தலில் சரியான பாடம் கற்பிப்பார்கள் என்று இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கொள்கை பரப்புச் செயலாளர் காயல் மஹபூப் கூறியுள்ளார்.
செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில்,
வேலூர் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தேசிய பொதுச் செயலாளரும், தமிழ்நாடு மாநிலத் தலைவ ருமான பேராசிரியர் கே.எம். காதர் மொய்தீன் தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லும் என தீர்ப்பளித்துள்ள டெல்லி உச்சநீதி மன்றம், இந்த வழக்கை தொடர்ந்தவர் 25 ஆயிரம் ரூபாய் செலவுத் தொகை வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் திமுக-காங்கிரஸ் கூட்டணியில் உள்ளது. இதன் பெயரையும், நட்சத்திரம் பதித்த பச்சிளம் பிறைக்கொடியையும் அதிமுக அணியினரோ அல்லது அந்த அணியிலுள்ள வேறு அமைப்புகளோ பயன் படுத்தக் கூடாது.
அதிமுகவுக்கு வால் பிடிக்கும் தாவூத் மிய்யாகான் அல்லது அவரது வகையறாக்கள் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பெயரையும், கொடியையும் பயன்படுத்தினால் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டில் கலைஞர் தலைமையிலான திமுக கூட்டணி புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும். மீண்டும் டெல்லியில் பிரதமர் மன்மோகன்சிங் தலைமையிலான காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமையும்.
இந்த தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி எடுத்த முடிவு பச்சை சந்தர்ப்பவாதம். தமிழக மக்கள் இதற்கு தகுந்த பாடம் கற்பிப்பார்கள். அவர்கள் கட்சியின் அன்புமணி, வேலு ஆகியோர் அமைச்சர்களாக இருந்த நிலையில், அந்த கூட்டணியை பாமக பொதுக்குழு விரும்பவில்லை என்றால் அந்த அமைச்சர்கள் இருவரின் செயல்பாட்டையும் பாமக பொதுக்குழு அங்கீகரிக்கவில்லை என்பதுதான் பொருள். இதற்கு பாமக தலைமை வெட்கப்பட வேண்டும் என்றார்.