ராமேஸ்வரம் வந்த 14 தமிழ் அகதிகள்
ராமேஸ்வரம்: இலங்கையில் நிலவும் போர் சூழலில் இருந்து உயிர் பிழைக்கும் நோக்கத்தில் இன்று காலை 14 அகதிகள் தனுஷ்கோடி அருகே உள்ள கடற்கரை பகுதிக்கு வந்தனர்.
இலங்கையில் தனி ஈழம் கேட்டு போராடும் விடுதலை புலிகளுக்கும், இலங்கை ராணுவத்துக்கும் கடும் போர் நடந்து வருகிறது. இதில் அப்பாவி தமிழர்கள் தினமும் 100 கணக்கில் பலியாகி வருகின்றனர்.
இலங்கை ராணுவம் விடுதலை புலிகளை அழிக்கிறேன் என்ற பெயரில் பாதுகாப்பு பகுதியில் இருக்கும் மருத்துவமனைகளிலும் குண்டுவீசி தாக்குதல் நடத்தி வருகிறது.
இதையடுத்து உயிருக்கு பயந்தநிலையில் இலங்கை தமிழர்கள் சொந்த வீட்டை, இடத்தை, நிலத்தை துறந்து தமிழ்நாட்டுக்கு அகதிகளாக வருகின்றனர்.
இந்நிலையில் இன்று இலங்கை தமிழர்கள் 14 பேர் தனுஷ்கோடி அருகே உள்ள ஊத்தப்பட்டி கடற்கரைக்கு தப்பி வந்தனர்.
அவர்களிடம் மத்திய, மாநில உளவுத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணைக்கு பின்பு அவர்கள் மண்டபம் அகதிகள் முகாமுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
அவர்கள் மன்னார் மற்றும் வவுனியாவில் வந்துள்ளதாக கூறியுள்ளனர்.