வருமான வரி விலக்கு ரூ.3 லட்சம்-பாஜக தேர்தல் அறிக்கை
மக்களவை தேர்தலுக்காக பாஜக வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ள சில உறுதிமொழிகள்:
வருமான வரி விலக்கு உச்ச வரம்பு ரூ. 3 லட்சமாக உயர்த்தப்படும். இதன்மூலம் ஆண்டுக்கு 3 லட்சம் ரூபாய் வரையிலான வருமானத்துக்கு வரி கிடையாது.
பெண்கள், முதியவர்களுக்கு ரூ.3.5 லட்சம் வரைக்கும் வரி விலக்கு அளிக்கப்படும்.
ராணுவ வீரர்கள், துணை ராணுவத்தினர், பாதுகாப்புப் படையினருக்கு வருமான வரியிலிருந்து முழு விலக்கு அளிக்கப்படும். ராணுவத்தில் பணி புரிபவர்களுக்காக தனி ஊதியக் கமிஷன் நிறுவப்படும்.
ராணுவத்தில் ஒரே மாதிரியான பதவியிலிருந்து ஓய்வு பெற்றவர்கள் அவர்கள் எந்த ஆண்டில் ஓய்வு பெற்றிருந்தாலும் ஒரே சீரான ஓய்வூதியம் பெற நடவடிக்கை எடுக்கப்படும்.
ஏழை மாணவர்கள் மருத்துவம், பொறியியல் போன்ற உயர் கல்வி கற்க குறைந்த வட்டியில் முழுக் கட்டணத்தையும் கடனாக வழங்க தேசிய மாணவர்கள் வங்கி ஏற்படுத்தப்படும். இந்தக் கடன் மீது 4% வட்டி மட்டுமே வசூலிக்கப்படும்.
தகவல் தொழில்நுட்பத் துறைக்கு தேவையான கூடுதல் வசதிகளும் சலுகைகளும் அளிக்கப்பட்டு நாடு முழுவதும் 1.2 கோடிப் பேருக்கு புதிதாக வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும். இதில் பெரும்பாலான வேலைகள் கிராமப்பகுதிகளில் ஏற்படுத்தப்படும்.
சில்லறை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீடுக்கு அனுமதி தரப்பட மாட்டாது.
வெளிநாடுகளிலிருந்து நம் நாட்டுப் பிரிவினைவாதிகளுக்குப் பணம் வருவது தடுக்கப்படும். இந்தியர்கள் சட்டவிரோதமாக வெளிநாட்டு வங்கிகளில் முதலீடு செய்துள்ள கறுப்புப் பணம் மீட்கப்படும்.
நாட்டில் மக்கள் அனைவருக்கும் தேசிய அடையாள அட்டை வழங்கப்படும். இதன்மூலம் இந்தியாவில் அன்னியர் ஊடுருவுவதும், குடியேறுவதும் தடுக்கப்படும்.
வங்கதேசத்தைச் சேர்ந்தவர்கள் ஊடுருவுவதைத் தடுக்க வங்கதேச எல்லை நெடுகிலும் வேலி அமைக்கப்படும்.
பயங்கரவாதச் செயல்களைத் தடுக்க பொடா போன்ற கடுமையான மீண்டும் சட்டம் இயற்றப்படும்.
மருத்துவ, பொறியியல் கல்லூரிகளில் ராகிங் என்ற பெயரில் அருவறுக்கத்தக்க கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும்.
காஷ்மீர் மாநிலத்துக்கு தனி அரசியல் அந்தஸ்து அளிக்கும் அரசியல் சட்டத்தின் 370வது பிரிவு நீக்கப்படும்.
ஏழைக் குடும்பங்களுக்கு கிலோ 2 ரூபாய் என்ற விலையில் 35 கிலோ அரிசி அல்லது கோதுமை மாதம்தோறும் வழங்கப்படும்.
விவசாயிகள் இதுவரை வாங்கியிருக்கும் கடன்கள் முழுதாக ரத்து செய்யப்படும். இனிமேல் விவசாயிகள் வாங்கும் கடன்களுக்கு அதிகபட்சம் 4% மட்டுமே வட்டி வசூலிக்கப்படும்.
விவசாயிகளில் முதியவர்கள், ஆதரவற்றவர்களுக்கு மாதந்தோறும் ஓய்வூதியம் வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.