கூட்டணி பற்றி சிந்திக்கும் மனநிலையில் நான் இல்லை-வைகோ
அதிமுகவுடனான தொகுதிப் பங்கீட்டில் சிக்கல் நீடித்து வரும் நிலையில், மதிமுகவை ஜெயலலிதா கழற்றிவிடவும் தயாராகிவிட்டதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து அதிமுகவுடனான பேச்சுவார்த்தை குறித்து கடந்த ஒரு வாரமாக தனது கட்சியின் மூத்த நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்களுடன் வைகோ தீவிர ஆலோசனை நடத்தி வருகிறார்.
இந் நிலையில் இலங்கை விவகாரம் தொடர்பாக ரயில்களில் விழிப்புணர்வு பிரச்சாரம் நடத்தும் தென் மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 200 மாணவர்கள் ரயில் முலம் நேற்று சென்னை வந்தனர்.
அவர்களை வரவேற்க வந்த வைகோவிடம் நிருபர்கள், அதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு தொகுதிகள் ஒதுக்கப்பட்டு விட்டதா?. தொகுதி உடன்பாட்டில் கால தாமதத்திற்கு என்ன காரணம்? என்று கேட்டபோது, வைகோ சொன்ன பதில் அதிர்ச்சி தந்தது.
அவர் கூறுகையில், கூட்டணி பற்றியோ, தேர்தலை பற்றியோ சிந்திக்க கூடிய மனநிலையில் நான் இல்லை. இதை தவிர இது தொடர்பான எந்த கேள்விகளுக்கும் நான் இப்போது பதில் சொல்ல விரும்பவில்லை என்றார்.
இதன் மூலம் ஜெயலலிதாவின் போக்கால் வைகோ பெரும் அதிருப்தியில் இருப்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
வழக்கமாக நிருபர்களிடம் மிக கலகலப்பாக இருப்பாக இருக்கும் வைகோவிடம் அது மிஸ்ஸிங். இது நிருபர்களே ஆச்சரியமாக இருந்தது.
இதற்கிடையே மதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் 8ம் தேதியும், மதிமுக பொதுக்குழு கூட்டம் 9ம் தேதியும் சென்னையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
9ம் தேதி ஜெயலலிதா தனது வேட்பாளர் பட்டியலை அறிவிக்கலாம் என கூறப்படும் நிலையில் அந்த தினத்தில் பொதுக் குழுவைக் கூட்டியுள்ளார் வைகோ.
இதன்மூலம் அதிமுக கூட்டணியில் அவர் நீடிப்பாரா என்பது சந்தேகத்திற்கிடமாகியுள்ளது.
நேற்று அதிமுக தரப்பில் இருந்து வைகோவிடம் பேசியவர்கள் மதிமுகவுக்கு விருதுநகர், திருவள்ளூர், பொள்ளாச்சி, ஆரணி ஆகிய தொகுதிகள் ஒதுக்கத் தயாராக உள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.
ஆனால் கூடவே காஞ்சீபுரம், திருப்பூர் ஆகிய தொகுதிகளையும் தந்தால் பேசலாம் என வைகோ கூறிவிட்டதாகத் தெரிகிறது. இருந்தாலும் கூட்டணி உடைந்து அதிமுக பலவீனப்பட்டுவிடக் கூடாது என்பதில் அக்கறை காட்டு்ம் சில விஐபி்க்கள் இரு தரப்பிடமும் பேசி வருகின்றனர்.