காங்கிரஸ் எம்.பிக்கள் 10 பேருக்கு மீண்டும் சீட்!
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 16 தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிடுகிறது. இதற்கான வேட்பாளர்களைத் தேர்வு செய்ய டெல்லியில் இன்று கூட்டம் நடைபெறுகிறது.
இதனால் தமிழக காங்கிரஸ் வட்டாரத்தில் யார் வேட்பாளர்கள் என்பதை அறிய பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.
புதுச்சேரியைப் பொறுத்தவரை நாராயணசாமி போட்டியிடுவார் எனத் தெரிகிறது. தற்போது அவர் ராஜ்யசபா எம்.பியாக உள்ளார்.
தமிழகத்தில் தற்போது எம்.பிக்களாக உள்ள பத்து பேருக்கும் மீண்டும் சீட் கிடைக்கும் எனத் தெரிகிறது. காரணம், இவர்களில் யாரை தூக்கினாலும் அவர் சார்ந்த கோஷ்டி பிரச்சினையைக் கிளப்பும் என்பதால்.
சிவகங்கையில் ப.சிதம்பரம், மயிலாடுதுறையில் மணிசங்கர அய்யர், திருப்பூரில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் போட்டியிடுவார்கள்.
சேலத்தில் தங்கபாலு மீண்டும் நிற்பார். காஞ்சிபுரம் தனி தொகுதியில் ராணி, ஈரோட்டில் கார்வேந்தன், விருதுநகரில் என்.எஸ்.வி.சித்தன், கோவையில் முன்னாள் அமைச்சர் ஆர்.பிரபு, தேனியில் ஜே.எம்.ஹாரூண் ஆகியோர் போட்டியிடலாம்.
மீதமுள்ள ஐந்து தொகுதிகளிலும் புதுமுகங்கள் நிறுத்தப்படக் கூடும்.
தனுஷ்கோடி ஆதித்தனின் மகள் அனுஷாவுக்கு நெல்லை சீட் தரப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னாள் காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமிக்கும் சீட் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதேபோல தென்காசியில் விஸ்வநாதன் நிறுத்தப்படலாம். கடலூரில் பி.ஆர்.எஸ். வெங்கடேஷுக்கு சீட் கிடைக்கும் என்கிறார்கள். திருச்சியில் ஜெரோமுக்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளன.
இன்று கூடும் காங்கிரஸ் வேட்பாளர் தேர்வுக் குழுக் கூட்டத்தில், வேட்பாளர்களை தேர்வு செய்து சோனியா காந்தியிடம் ஒப்படைக்கவுள்ளனர். அவர் 11ம் தேதி வேட்பாளர்களை அறிவிப்பார் எனத் தெரிகிறது.
தமிழகத்தில், 16ம் தேதி வேட்பு மனு தாக்கல் தொடங்குகிறது. எனவே அதற்குள் வேட்பாளர்கள் பட்டியல் வெளியாகி விடும் என்பது மட்டும் நிச்சயம்!