அப்படி பேச மாட்டேன்-கோர்ட்டில் உறுதியளித்த வருண்
எடா (உ.பி): உச்சநீதிமன்றத்தின் உத்தரவுப்படி இனிமேல் துவேஷத்தைத் தூண்டும் வகையில் பேச மாட்டேன் என்று உ.பி. கோர்ட்டில் வருண் காந்தி உறுதிமொழி அளித்துள்ளார்.
பிலிபித் தொகுதியில் பேசிய பேச்சுக்காக தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் வருண் காந்தி.
தன்னை ஜாமீனில் விடுவிக்கக் கோரியும், தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் தன்னைக் கைது செய்ததை செல்லாது என அறிவிக்கக் கோரியும் அவர் சுப்ரீம் கோர்ட்டி்ல மனு செய்துள்ளார்.
அவரது ஜாமீன் கோரிக்கையை பரிசீலித்த உச்சநீதி்மன்றம், இனிமேல் இதுபோல துவேஷமாக பேச மாட்டேன் என வருண் காந்தி உத்தரவாதம் அளித்தால் ஜாமீன் தருவது குறித்து பரிசீலிக்க முடியும் என அறிவுறுத்தியது.
இதற்கு வருண் காந்தி ஒப்புக் கொண்டார். இதைத் தொடர்ந்து வருண் காந்தியின் உத்தரவாதம் அடங்கிய மனு, எடா மாவட்ட நீதிபதி கெளரவ் தயாளிடம் அளிக்கப்பட்டது.
இந்த உத்தரவாதத்தை அவர் சுப்ரீம் கோர்ட்டுக்கு அனுப்பி வைக்கவுள்ளார். வருகிற 16ம் தேதி வருணின் ஜாமீன் மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது. அப்போது அவர் அளித்துள்ள உத்தரவாதத்தை ஏற்றுக் கொண்டு உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கும் எனத் தெரிகிறது.
வருண் காந்தி தனது உத்தரவாதப் பத்திரத்தில், இந்திய அரசியல் சட்டத்திற்குப் புறம்பாக இனி எதையும் பேச மாட்டேன். நடத்தை விதிமுறைகளுக்குக் கட்டுப்பட்டு நடப்பேன் என உறுதியளித்துள்ளதாக அவரது வக்கீல் பிரசாந்த் சிங் அடல் கூறியுள்ளார்.
இன்று வருண் காந்தியை அவரது சித்தி அம்பிகா சுக்லா எடா சிறைக்குச் சென்று பார்த்தார்.