ஈழம்: தமிழர் தேசிய இயக்க தொண்டர் தீக்குளித்து சாவு
சென்னை: இலங்கையில் தமிழர்கள் கொல்லப்படுவதைக் கண்டித்தும், போர் நிறுத்தம் ஏற்பட இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் வேண்டும் என்று கோரியும் சென்னையில் தமிழர் தேசிய இயக்கத்தைச் சேர்ந்த தொண்டர் ஒருவர் தீக்குளித்து இறந்தார்.
சிவானந்தன் (46) என்ற அந்தத் தொண்டர் தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறனின் தீவிரமான ஆதரவாளராவார்.
கரூரைச் சேர்ந்த அவர் சென்னை வடபழனியில் உள்ள தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணைய அலுவலக வாயிலுக்கு இரவில் வந்தார்.
இலங்கையில் அப்பாவித் தமிழர்கள் உயிரிழப்பதை தடுத்து நிறுத்த வேண்டும் என கோஷம் எழுப்பியபடி உடலில் மண்ணெண்ணெயை ஊற்றிக் கொண்டு தீ வைத்துக் கொண்டார்.
தீப் பற்றி எரிந்த நிலையிலும் இலங்கையில் போரை நிறுத்த இந்தியா நடவடிக்கை எடுக்க வேண்டும் என குரல் கொடுத்த அவர் சிறிது நேரத்தில் சரிந்து விழுந்தார்.
தகவல் அறிந்த போலீசார் வந்து அவரை கீழ்ப்பாக்கம் அரசு பொது மருத்துவமனையில் சேர்த்தனர். அவரது உடலில் 80 சதவீதம் அளவுக்கு தீக்காயம் ஏற்பட்டது.
சம்பவம் குறித்து அறிந்த பழ. நெடுமாறன் மருத்துவமனைக்கு ஓடிச் சென்று சிவானந்தன் நிலையைப் பார்த்து கண்ணீர் விட்டார். விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனும் வந்து பார்த்தார்.
இந் நிலையில் சிகிச்சை பலனின்றி சிவானந்தன் உயிரிழந்தார். சிவானந்தனுக்கு திருமணம் ஆகவில்லை. சென்னை வடபழனியில் தங்கியிருந்து பெயிண்டர் வேலை செய்து வந்ததார்.
தகவல் அறிந்த கரூரில் உள்ள சிவானந்தன் உறவினர்கள் கதறியழுதபடி சென்னைக்கு புறப்பட்டு சென்றுள்ளனர்.