புலிகள் பகுதியிலிருந்து 35,000 தமிழர்கள் மீட்பு: ராணுவம்
விடுதலைப் புலிகள் வசம் இருந்த ஒரு பகுதியை இன்று காலை ராணுவம் பிடித்ததாகவும், அந்தப் பகுதியில் சிக்கியிருந்த 35 ஆயிரம் அப்பாவிகள் மீட்கப்பட்டதாகவும் ராணுவத்தின் தகவல் தெரிவிக்கிறது.
புதுமத்தாளன் பகுதியில் உள்ள 3 கிலோமீட்டர் பரப்பளவிலான பகுதியே இன்று காலை மீட்கப்பட்டதாக ராணுவம் தெரிவித்துள்ளது.
இதன் மூலம் அந்தப் பகுதியில் சிக்கியிருந்த தமிழர்கள் அரசுப் பகுதிக்கு வர முடிந்ததாகவும் அது கூறியுள்ளது.
ஒரே நாளில் இத்தனை பேர் மீட்கப்பட்டிருப்பது இதுவே முதல் முறை என்றும் ராணுவம் கூறியுள்ளது.
விடுதலைப் புலிகள் வசம் உள்ள மீதமுள்ள பகுதிளை மீட்க முழு அளவிலான தாக்குதலில் இறங்க ராணுவம் தயாராகி வருவதாக கூறப்படுகிறது.
எனவே முடிந்தவரை எவ்வளவு தமிழர்களை மீட்க முடியுமோ, அவ்வளவு பேரை மீட்கும் முயற்சியில் ராணுவம் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.
2 தற்கொலைப் படைத் தாக்குதல்கள் ..
இன்று காலை விடுதலைப் புலிகள் பகுதியிலிருந்து தமிழர்களை மீ்ட்கும் முயற்சியில் ராணுவம் ஈடுபட்டிருந்தபோது அங்கு விடுதலைப் புலிகள் 2 தற்கொலைப் படைத் தாக்குதல்களை நடத்தியதாக கூறப்படுகிறது.
இதில் 17 பேர் உயிரிழந்ததாகவும் ராணுவம் கூறுகிறது.
வீடியோ படம் பார்த்த ராஜபக்சே..
இதற்கிடையே தமிழர்கள் பெருமளவில் தப்பி வருவதை வீடியோவில் படமாக்கியுள்ளது இலங்கை ராணுவம். இந்தப் படங்களைப் பார்க்க அதிபர் ராஜபக்சே ராணுவத் தலைமையகத்திற்குச் சென்று அங்கு வீடியோ படங்களைப் பார்வையிட்டார்.