சட்டவிரோதமாக பிரசார சிடி தயாரிப்பு- 6 பேர் கைது
சென்னை: சட்டவிரோதமாக, இலங்கைத் தமிழர்களின் அவலங்களை சித்தரித்து பிரசார சிடி தயாரித்த இலங்கைத் தமிழர்கள் உள்ளிட்ட 6 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
இலங்கைத் தமிழர் பிரச்சினை தொடர்பாக தேர்தல் களத்தில் சிடிக்களை விநியோகிக்கவுள்ளதாக கிடைத்த தகவலைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் போலீஸார் தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளனர்.
சமீபத்தில் கொளத்தூர் மணியின் மருமகன் வீட்டில் ரெய்டு நடந்தது. நேற்று முன்தினம் புதிய பார்வை ஆசிரியரும், சசிகலாவின் கணவருமான நடராஜன் வீட்டில் ரெய்டு நடந்தது.
இந்த நிலையில், சென்னை கே.கே.நகரில் ஒரு கம்ப்யூட்டர் நிறுவனத்தில் பிரசார சிடிக்கள் தயாரிக்கப்படுவதாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது.
அங்குள்ள அண்ணாஜி நகரில் இருக்கும் கன்னித் தமிழ் கம்ய்பூட்டர் நிறுவனத்திற்கு போலீஸார் விரைந்து சென்று சோதனை நடத்தினர்.
அப்போது அங்கு நூற்றுக்கணக்கான சிடிக்கள் கிடைத்தனய அதில், மத்திய-மாநில அரசுகளுக்கு எதிராக காட்சிகள் இடம் பெற்றிருந்தன.
மனோகரா, பராசக்தி திரைப்படங்களில் வரும் காட்சிகள் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் மூலம் மாற்றி அமைக்கப்பட்டிருந்தன. இயக்குநர் சீமானை கைது செய்தது தவறு என்பது போல் காட்சிகள் காட்டப்பட்டிருந்தன.
மனோகரா படத்தில் சிவாஜியை சங்கிலியால் இழுத்து வரும் காட்சியை சீமானை சங்கிலியால் கட்டி இழுத்து வருவது போல் மாற்றி அமைக்கப்பட்டிருந்தது.
அப்போது, நடிகை கண்ணாம்பா பேசும் வசன காட்சிகளை மாற்றி மத்திய, மாநில அரசுக்கு எதிராக பேசியது போல சட்டவிரோதமாக எடுக்கப்பட்டிருந்தன.
ஈழத்தமிழர்களின் விடுதலை போராட்டமும்-துரோக வரலாறும், யாருக்கு வாக்களிப்போம், தமிழின துரோகிகள், புதிய பராசக்தி, சீமான் மனோகரா, மீண்டும் கண்ணகி போன்ற தலைப்புகளில் 6 வகையான சிடி.கள் தயாரிக்கப்பட்டிருந்தன.
இதையடுத்து கம்ப்யூட்டர் நிறுவன நிறுவனர் கபிலன், இயக்குநர் கமலதாசன், சுரேஷ் பாபுகுமார், சரவண சுந்தரம், திவாகரன், பாலசுந்தரம் ஆகியோரை போலீஸார் கைது செய்தனர்.
இவர்களில் கபிலனும், கமலதாசனும் யாழ்பாணத்தை சேர்ந்தவர்கள் ஆவார்கள். இவர்கள் 1984-ம் ஆண்டு சென்னை வந்தனர். இவர்களுடைய பாஸ்போர்ட் மற்றும் விசா காலாவதியாகி விட்டது.
சிடிக்களில் திவாகரன் பின்னணிக் குரல் கொடுத்துள்ளார். பல குரலில் பேசும் திறமை படைத்தவராம் இவர். புரோகிதர் தொழிலையும் மேற்கொண்டு வந்துள்ளார்.
கைதான 6 பேரும் மீதும் 6 சட்டபிரிவுகளின் கீழ் கே.கே.நகர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.