ரூ90 லட்சம் கொடுத்து மகனை மீட்ட ஐவுளிக்கடை அதிபர்
சென்னை: சென்னை ஜவுளிக்கடை அதிபரின் மகனை கடத்திய கும்பல் ஒன்று அவரிடம் ரூ. 90 லட்சத்தை வாங்கி கொண்டு அவரை விடுத்துள்ளது. இது குறித்து சென்னை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை வண்ணாரப்பேட்டையை சேர்ந்தவர் முகமது கலந்தர். அவர் அப்பகுதியில் காந்தர் மதினா என்ற பெயரில் ஜவுளிக்கடை நடத்தி வருகிறார்.
இந்நிலையில் நேற்று கலந்தரின் மகன் முகமது யூனுஸ் காலையில் ஐவுளி கடைக்கு சென்றார். அவருக்கு பின்னால் சிறிது நேரத்தில் கடைக்கு சென்ற கலந்தர் மகன் பக்கத்தில் எங்காவது போயிருப்பார் என நினைத்தார். ஆனால் வெகு நேரமாகியும் அவர் வராததை அடுத்து அதிர்ச்சி அடைந்த கலந்தர் பல இடங்களில் மகனை தேடினார்.
ஆனால், அவரை பற்றி எந்த விபரமும் தெரியவில்லை. இந்நிலையில் இரவு 7 மணிக்கு அவருக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. அப்போது மறுமுனையில் பேசிய மர்ம ஆசாமி ஒருவர், யூனுசை தாங்கள் தான் கடத்தியிருப்பதாகவும், ரூ. ஒன்றரை கோடி கொடுத்தால் அவரை விடுவித்துவிடுவதாகவும். அதைவிட்டு போலீசுக்கு புகார் தெரிவித்தால் அவரை கொன்று விடுவதாகவும் மிரட்டினார்.
அப்போது கலந்தர் கூறுகையில் என்னிடம் அவ்வளவு பணம் இல்லை. ரூ. 90 லட்சம் மட்டும் தான் இருக்கிறது என கூறியுள்ளார். இந்த தொகைக்கு ஒப்புக்கொண்ட அந்த கும்பல் சென்னை உயர்நீதிமன்றம் அருகை கலந்தரை பணத்தை கொண்டு வர சொன்னது. வரும் போது போலீசிடம் புகார் தெரிவிக்க கூடாது என மீண்டும் எச்சரிக்கை விடுத்தது.
இதையடுத்து பணத்துடன் உயர் நீதிமன்றத்துக்கு வந்த கலந்தரிடம் அந்த கும்பல் ரூ. 90 லட்சத்தை வாங்கி கொண்டு அவர்களை விடுவித்தது.
அப்போது அந்த கும்பலில் இருந்த ஒருவன் கலந்தரிடம், உங்கள் மகனது உடம்பில் வெடிகுண்டை வைத்து கட்டியுள்ளோம். நாங்கள் இடத்தை விட்டு செல்லும் முன்னதாக போலீசை கூப்பிட்டால் ரிமோட் மூலம் வெடிகுண்டை வெடிக்க செய்துவிடுவதாக கூறியுள்ளார்.
இதையடுத்து அந்த கும்பல் அங்கிருந்து தப்பி சென்றது. இந்நிலையில் இந்த கடத்தல் சம்பவத்தை காற்று வாக்கில் அறிந்த போலீசார் சென்னை கமிஷ்னர் ராதாகிருஷ்ணனின் உத்தரவின் பேரில் யூனுசிடம் விசாரணை செய்தனர். அப்போது அவர் கூறுகையில்,
கடந்த 26ம் தேதி கடைக்கு சென்று கொண்டிருந்தேனஅ. அப்போது 4 பேர் கொண்ட கும்பல் என்னை கடத்தி சென்றது. அவர்கள் கடலூரில் உள்ள சவுக்கு தோப்பில் என்னை கட்டு வைத்தனர். பின்னர் சென்னை கொண்டு வந்து ஒரு லாட்ஜில் அடைத்து வைத்தனர்.
எனக்கு சாப்பிடுவதற்கு அவர்கள் எதுவும் கொடுக்கவில்லை. உணவு கேட்டபோது அடித்து, உதைத்து துன்புறுத்தினார்கள் என்றார்.
மேலும் யூனுஸ் கொடுத்த தகவல்களின் அடிப்படையில் போலீசார் அப்பகுதியை சேர்ந்த அப்துல்லா, மொய்தீன், சக்கரபாணி விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.