இந்தியா உதவாவிட்டாலும் கூட தனி ஈழம் அமைவது உறுதி - நெடுமாறன்
ஈரோடு: தனி ஈழம் அமைவது உறுதி. இந்தியா உதவினாலும், உதவாவிட்டாலும் ஈழம் அமைவது உறுதி என்று கூறியுள்ளார் இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன்.
ஈரோட்டில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,
இலங்கையில் போர் நிறுத்தம் செய்யப்படவில்லை. கனரக ஆயுதங்களை பயன்படுத்த மாட்டோம் என்றுதான் இலங்கை அரசு கூறி உள்ளது. ஆனால், கருணாநிதியும், ப.சிதம்பரமும் போர்நிறுத்தம் ஏற்பட்டு உள்ளது என்று தமிழக மக்களை ஏமாற்ற முயற்சிக்கிறார்கள்.
இலங்கையில் தமிழர்களுக்கு என்று ஒரு நாடு அமைந்து விடக் கூடாது என்று இந்திய அரசு உறுதியாக உள்ளது. அங்கு பின்னால் நின்று போரை நடத்துவதே இந்திய அரசுதான்.
அதுபோல் சர்வதேச பத்திரிகையாளர்களை இலங்கை அரசு போர் நடக்கும் பகுதிகளுக்கு அனுமதிப்பதே இல்லை. ராணுவ அதிகாரிகள் தணிக்கை செய்த செய்திகள் மட்டுமே வெளியிடப்படுகின்றன.
எனவே இலங்கை அரசு கூறும் தவறான தகவல்கள்தான் பத்திரிகைகளில் வெளி வருகின்றன. தமிழர்களுக்கு, சிங்களர்களுக்கு இணையான சம அந்தஸ்து வேண்டும். அதற்கு தனி ஈழம் அமைவதை தவிர வேறு வழி இல்லை. இந்திய அரசு உதவவில்லை என்றாலும், தனி ஈழம் அமைந்தே தீரும்.
நான் பொதுக்கூட்டத்தில் பேசினால், சட்டம்-ஒழுங்கு கெடும் என்ற காரணத்தை சொல்லி ஒட்டன்சத்திரம், வேடசந்தூர் மற்றும் திண்டுக்கல் பொதுக்கூட்டங்களுக்கு போலீசார் தடை விதித்து உள்ளார்கள்.
தேர்தலில் நிச்சயம் தோல்வி ஏற்படும் என்ற பயத்தில் கருணாநிதி எதிர்க்கட்சிகளின் குரல்வளையை நெரிக்க முயற்சி செய்கிறார்.
ஏற்கனவே பல்வேறு அமைப்புகள், ஈழத்தமிழர்களின் அவலநிலை குறித்து வெளியிட்ட குறுந்தகடுகளை போலீசார் பறிமுதல் செய்து இருக்கிறார்கள். பலர் மீது வழக்குகள் போடப்பட்டு உள்ளது. ப.சிதம்பரம் தொகுதியில், அவருக்கு எதிராக பிரசாரம் செய்த மாணவர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
தமிழ்நாடு முழுவதும் எதிர்க்கட்சிகளுக்கு எதிரான அடக்குமுறை கட்டவிழ்த்து விடப்பட்டு இருக்கிறது. இவை குறித்து தேர்தல் ஆணையாளர் நரேஷ் குப்தாவிடம் புகார் செய்து இருக்கிறோம் என்றார் நெடுமாறன்.