கசாப்புக்கு 'கபாப்'..எனக்கு சுரைக்காய்?-வருண் புலம்பல்
மீரட்: மும்பையில் தீவிரவாதத் தாக்குதலில் ஈடுபட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் தீவிரவாதி முகம்மது அஜ்மல் கசாப்புக்கு சிறையில் தந்தூரி சிக்கன் தருகிறார்கள். ஆனால் எனக்கோ வெறும் சுரைக்காய் கூட்டுதான் கொடுத்தார்கள் என கூறியுள்ளார் வருண் காந்தி.
இஸ்லாமியர்களுக்கு எதிராக துவேஷமாக பேசியதாக கைதாகி தற்போது பரோலில் விடப்பட்டுள்ள வருண் காந்தி உ.பி. மாநிலம் மீரட்டில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் பேசினார்.
அப்போது அவர் பேசுகையில், தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு எடா சிறையில் அடைக்கப்பட்டு இருந்த எனக்கு அங்கு சாப்பிட சுரைக்காய் கூட்டு கொடுத்தார்கள். ஆனால் கசாப்புக்கு சிறையில் தந்தூரி சிக்கன் கொடுக்கிறார்கள். இருந்தாலும் நான் சைவம் என்பதால் எனக்கு சுரைக்காய் கூட்டு பிடிக்கும்.
காங்கிரஸ் தனது கடைசி மூச்சை விட்டுக் கொண்டு இருக்கிறது. எனவே சாகப் போகிற அக்கட்சி குறித்து நான் விமர்சிக்கப் போவதில்லை.
மரண படுக்கையில் இருப்பவர்கள் பற்றி தவறாக எதுவும் பேசக்கூடாது என்று என்னிடம் தாயார் மேனகா காந்தி கூறி இருக்கிறார். சாகப் போகிற காங்கிரஸ் கட்சிக்கு போடும் ஓட்டு வீண் என்றார் வருண் காந்தி.