சென்னையி்ல் சோனியாவுக்கு கருப்பு கொடி-நெடுமாறன்
சென்னை: நாளை சென்னை வரும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு கருப்புக் கொடி காட்டும் போராட்டம் நடத்தப்படும். இதில் இயக்குநர் பாரதிராஜாவும் கலந்து கொள்கிறார் என்று கூறியுள்ளார் இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன்.
இதுதொடர்பாக நெடுமாறன் வெளியிட்டுள்ள அறிக்கை:
இலங்கையில் கடந்த 8 மாத காலத்தில் 7 ஆயிரம் தமிழர்கள் சிங்கள ராணுவத்தினால் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். 3 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் உணவு, மருந்தின்றி காடுகளிலும், சாலையோரங்களிலும் தவிக்கின்றனர். போரை நிறுத்த வேண்டும். அப்பாவி தமிழ் மக்களை காக்க வேண்டும் என ஆறரை கோடி தமிழர்கள் ஒன்றுபட்டு பல போராட்டங்கள் நடத்தியும் இந்திய அரசு எதுவும் செய்யவில்லை. மாறாக, சிங்கள ராணுவத்திற்கு ஆயுத உதவி, நிதியுதவி வழங்கி தமிழர் கொலைக்கு துணை செய்தது, செய்து வருகிறது.
இந்திய அரசின் வழிகாட்டும் குழுவின் தலைவரான சோனியாகாந்தி ராஜபக்சேவின் கொலை வெறியைக் கண்டிக்கவில்லை. ஈழத்தமிழர்களை காப்பாற்ற முன்வரவில்லை. தமிழக மக்களின் உணர்வுகளை சற்றும் மதிக்காத சோனியாகாந்தி தேர்தல் பிரசாரத்திற்காக மட்டும் தமிழகம் வருகிறார்.
கருப்புக் கொடிகள் பறக்கட்டும் ...
அவருக்கு நமது எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் தமிழகமெங்கும் சகல ஊர்களிலும் கறுப்புக்கொடிகள் பறக்கப்பட வேண்டும். தமிழர்கள் கறுப்புச் சின்னம் குத்திக் கொள்ள வேண்டும்.
சென்னையில் சோனியா காந்திக்கு எதிராக நடத்தப்படும் கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டத்தில் நானும், இயக்குனர் பாரதிராஜா மற்றும் பல தலைவர்கள் பங்கேற்கிறோம்.
தமிழர்களின் கொதிப்புணர்வை வெளிபடுத்த இருக்கும் இப்போராட்டத்தில் கட்டுப்பாடாகவும், அமைதிக்கு பங்கம் நேராத வகையிலும் கலந்து கொள்ளும்படி தமிழர்கள் அனைவரையும் வேண்டிக்கொள்கிறேன் என்று கோரியுள்ளார் நெடுமாறன்.
15 மணி நேரத்தி்ல 2000 தமிழர்கள் பலி..
இதற்கிடையே, பழ. நெடுமாறன் அளித்துள்ள ஒரு பேட்டியில், இலங்கையில் 15 மணி நேரத்தில் மட்டும் 2000 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
முள்ளிவாய்க்கால், ஒற்றைப்பனையடி, வளையார்குண்டு, இரட்டை வாய்க்கால் ஆகிய பகுதிகளில் இந்தப் படுகொலைகள் நடந்துள்ளன.
தமிழர் பகுதிகள் எங்கும் உடல்களாக கிடக்கின்றன. போர் முனையில் உணவு, மருந்து இல்லாமல் ஒன்றரை லட்சம் தமிழர்கள் சிக்கித் தவிக்கின்றனர்.
ஐ.நா. சபை உடனடியாக தலையிட்டு உணவின்றி தவிக்கும் மக்களுக்கு உணவளிக்க ஏற்பாடு செய்ய வேண்டும். தேவையான மருந்துகளை அளிக்க வேண்டும்.
போர் நிறுத்தம் செய்யப்பட்டு விட்டதாக இந்திய அரசும், ப.சிதம்பரமும் கூறுகிறார்கள். ஆனால் இலங்கை ராணுவ செய்தித் தொடர்பாளர் உதய நாணயக்காராவோ, கனரக ஆயுதங்களை மட்டுமே பயன்படுத்தவில்லை என்கிறார்.
இந்தியா, பாகிஸ்தான், சீனாவிடமிருந்து ஆயுதங்கள், உதவிகள், பயிற்சிகள் என சகலத்தையும் பெற்றுக் கொண்டுள்ளதாக இலங்கை ஒப்புக் கொண்டுள்ளது. இதனால்தான் விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் அவர்களது கை ஓங்கியுள்ளது.
விடுதலைப் புலிகளுக்கு எதிரான பல தகவல்களை தந்து உதவியதாக இந்தியாவைப் பாராட்டியுள்ளார் நாணயக்காரா.
போர் நிறுத்தம் என்ற அறிவிப்பு நாடகம். இதை அறிவித்த முதல்வர் கருணாநிதி, ராஜபக்சேவுடன் ரகசியமாகப் பேசியதாக அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா புகார் கூறியிருப்பது நம்பும்படியாகவே உள்ளது.
பிரபாகரன் இலங்கையை விட்டு தப்பி ஓட மாட்டார். ஆனால் விரைவில் போர் உக்கிரமடையும். விடுதலைப் புலிகளின் கொரில்லா யுத்தம் இன்னும் செயலிழக்கவில்லை. அதில் நிச்சயம் புலிகள்தான் வெல்வார்கள் என்றார் நெடுமாறன்.












Click it and Unblock the Notifications