கேள்வி கேட்ட தொண்டர்-டென்ஷனான 'கேப்டன்'
மதுரை: திமுக, அதிமுக என்ன செய்தது என்று கேட்கிறீர்களே, விருத்தாச்சலம் தொகுதியில் நீங்கள் என்ன செய்தீர்கள் என்று தொண்டர் கேட்டதால் ஆத்திரமடைந்தார் விஜயகாந்த்.
மதுரையில் பிரசாரம் மேற்கொண்டார் விஜயகாந்த். மேலூர் பஸ் நிலையப் பகுதியில் அவர் பிரசாரம் செய்து பேசினார்.
அப்போது திமுக என்ன செய்தது, அதிமுக என்ன செய்தது என்று சரமாரியாக கேள்விகள் கேட்டுக் கொண்டிருந்தார்.
அந்த சமயத்தி்ல கூட்டத்தில் இருந்த ஒரு தொண்டர் உரத்த குரலில், நீங்கள் விருத்தாசலம் தொகுதிக்கு என்ன செய்தீர்கள் என்றார்.
இதனால் அங்கு சலசலப்பு ஏற்பட்டது. கோபமடைந்த விஜயகாந்த், நீ என்ன திமுககாரனா? என் தொகுதிக்கு வந்து பார். என்ன செய்திருக்கிறேன் என்று தெரியும் என்று வேகமாக பதிலளித்தார்.
பின்னர் மக்களைப் பார்த்துப் பேசுகையில், உங்களுக்காகத்தான் நான் போராடுகிறேன். 40 தொகுதிகளிலும் வெற்றியை கொடுங்கள். தமிழகத்தை மாற்றி காட்டுகிறேன் என்று கூறிவிட்டு கிளம்பினார்.
அதே போல மதுரை வண்டியூரில் விஜயகாந்த் பேசுகையில், தொண்டர் ஒருவர், தலைவா இந்தப் பக்கம் பார்த்து பேசு என்றார். இதையடுத்து அவர் பக்கம் திரும்பிய விஜயகாந்த், என்னை பார்ப்பது இருக்கட்டும், முதலில் ஓட்டை மறக்காமல் போடு என்றார். தொடர்ந்து அந்தத் தொண்டர், தெய்வமே என்று கூறி விஜய்காந்தைப் பார்த்து ஓவராக உணர்ச்சிவசப்பட, இந்த ஆவேசத்தை எல்லாம் ஓட்டுக்கு பணம் கொடுக்க வருபவரிடம் காட்டு என்றார் கடுப்பாக.
முன்னதாக மதுரை சிம்மக்கல், அய்யர் பங்களா ஆகிய இடங்களில் அவர் பேசுகையில்,
ஓட்டு போட வாக்காளர்களுக்கு கொடுக்கப்படும் பணம், ஊழலில் சம்பாதித்தது. பெண்கள் அதை வாங்கக்கூடாது. பெண்கள் வாங்கினால் நாடு தாங்காது. இலங்கை பிரச்னையில் கருணாநிதி நாடகத்தை மக்கள் நம்பத் தயாராக இல்லை.
தேமுதிகவின் கொடி, தோரணங்களை கட்ட விடாமல் ஊமச்சிகுளம் போலீசார் தொந்தரவு கொடுத்துள்ளனர். ஆட்சியில் இருப்பவர்கள் ஐந்தாண்டுகள் மட்டுமே இருப்பர். ஆனால், அரசு பணியிலுள்ள போலீசார் 58 வயது வரை இருக்க வேண்டும். போலீசார் இதை புரிந்து கொள்ள வேண்டும். காலம் ஒரு நாள் மாறும், அப்போது காட்சியும் மாறும் என்றார்.












Click it and Unblock the Notifications