திமுகவுக்கு வாக்களிக்க கோரி பெண் தீக்குளித்து சாவு
திருச்சி: திமுகவுக்கு வாக்களியுங்கள் என்று கோஷமிட்டபடி பெண் தீக்குளித்துத் தற்கொலை செய்து கொண்டார்.
பெரம்பலூர் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் நடிகர் நெப்போலியன், நேற்று டால்மியாபுரம் அருகே புள்ளம்பாடி பகுதியில் பிரசாரம் செய்தார். புள்ளம்பாடி அரசு மேல்நிலைப்பள்ளி அருகே அவரது பிரசார ஜீப் வந்தது.
அங்கு அவர் பேசினார். அதை புள்ளம்பாடி மாரியம்மன் கோவில் பகுதியை சேர்ந்த லட்சுமி (50) என்ற திமுக தொண்டர் கேட்டார்.
பின்னர் நெப்போலியன் பேசி விட்டுக் கிளம்பிச் சென்ற சிறிது நேரத்தில் கலைஞர் வாழ்க! நெப்போலியன் வாழ்க! தி.மு.க.வுக்கு ஓட்டு போடுங்க என்று கோஷமிட்டபடி மண்ணெண்ணையை உடலில் ஊற்றிக் கொண்டு தீக்குளித்தார்.
உடலில் தீப்பிடித்து எரிந்ததால் அலறித் துடித்த அவரை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் தண்ணீரை ஊற்றி தீயை அணைத்து திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று மாலை லட்சுமி இறந்து விட்டார்.
லட்சுமியின் கணவர் எழுமலை சில வருடங்களுக்கு முன்பே இறந்து விட்டார். அவருக்கு 3 மகன்கள் உள்ளனர்.












Click it and Unblock the Notifications