2 மாத குழந்தைக்கு இருதய ஆபரேஷன்
சென்னை: சென்னை அடையாரில் உள்ள மலர் மருத்துவமனையில் 2 மாதமே ஆன பெண் குழந்தைக்கு இருதய அறுவைச் சிகிச்சை செய்து அக்குழந்தைக்குப் புத்துயிர் அளித்துள்ளனர்.
இதுகுறித்து மருத்துவமனையின் இதய அறுவை சிகிச்சை துறை இயக்குநர் டாக்டர் கே. ஆர். பாலகிருஷ்ணன், இதய மருத்துவ நிபுணர் டாக்டர் ஆர். ரவிக்குமார், இதய மயக்க மருத்துவ நிபுணர் டாக்டர் சுரேஷ் ராவ், குழந்தை மருத்துவ நிபுணர் டாக்டர் ஜி. பிரபாகரன் ஆகியோர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது..
சென்னை தாம்பரத்தைச் சேர்ந்த ஸ்ரேயா பிறந்து 2 மாதங்களே ஆகிறது. பிறந்தது முதலே குழந்தைக்கு இதயக் கோளாறு இருந்தது.
இதயத்தின் மையோட்ரல் வால்வில் கசிவு இருந்தது. இதன் காரணமாக, கை - கால்களில் நாடித் துடிப்பு குறைந்து காணப்பட்டது. குறைந்த ரத்த அழுத்தமும் இரு்நததால் மூச்சு விட குழந்தைக்கு சிரமம் ஏற்பட்டது.
இதயத் துடிப்பும் சீராக இல்லை. மிகவும் மோசமான நிலையில் மலர் மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் 10 தினங்களுக்கு முன்பு ஸ்ரேயா அனுமதிக்கப்பட்டாள்.
அங்கு ஸ்ரேயாவின் இதயத்தில் உள்ள மையோட்ரல் வால்வு வடிவத்துக்கு சிறிய அளவில் செயற்கை வால்வு கிடைக்காது என்பதால், அதைச் சரி செய்ய முடிவு செய்யப்பட்டது. அதன்படி கோர் - டெக்ஸ் எனப்படும் வளையத்தைப் பயன்படுத்தி வால்வில் இருந்த பாதிப்பு மூன்று மணி நேர அறுவை சிகிச்சை மூலம் வெற்றிகரமாகச் சரி செய்யப்பட்டது.
தற்போது குழந்தைக்கு இருதயத் துடிப்பு, மூச்சு விடுவது, ரத்த அழுத்தம் ஆகியவை நார்மலாக உள்ளன.
அறுவைச் சிகிச்சையால் புத்துயிர் பெற்ற ஸ்ரேயா தற்போது தனது பெற்றோருடன் வீடு திரும்பியுள்ளாள் என்றனர்.