புதுச்சேரியிலிரு்து தேர்தலையொட்டி மது கடத்தல் - போலீஸ் தீவிர கண்காணிப்பு
சென்னை: தேர்தலையொட்டி புதுச்சேரியிருந்து மது பாட்டில்கள் கடத்தப்படுவதைத் தடுக்க எல்லைப் பகுதியில் போலீஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
புதுச்சேரியில் மது ஆலைகள் அதிகம். அங்கு விலையும் குறைவு. இதனால் தமிழகத்தைச் சேர்ந்த சில அரசியல் கட்சிகள், தங்களது தொண்டர்கள் உற்சாகம் குறையாமல் பணியாற்றுவற்காக பல்க் ஆக ஆர்டர்கள் கொடுத்து புதுச்சேரியிலிருந்து மது வகைகளை இறக்குமதி செய்ய ஏற்பாடு செய்துள்ளனர்.
ஆனால் புதுச்சேரியிலிருந்து மது வகைகளை வாங்கி தமிழகத்திற்குக் கொண்டு வரக் கூடாது. இதற்காக போலீஸார் கண்களில் மண்ணைத் தூவுவற்காக குளிர்பானங்கள் என்ற பெயரில் மது பான பாட்டில்களை கிழக்குக் கடற்கரைச் சாலை வழியாக ரகசியமாக கொண்டு வருகின்றனர்.
இதையடுத்து புதுச்சேரியிலிருந்து மது பாட்டில்கள் தமிழகத்திற்குள் கொண்டு வரப்படுவதைத் தடுக்க போலீஸாருக்கு சென்னை கமிஷனர் உத்தரவிட்டுள்ளார்.
இதையடுத்து கிழக்குக் கடற்கரைச் சாலையில் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதேபோல புறநகர் போலீஸார், தாம்பரத்தில் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.