ஈழத்துக்கு 50,000 உணவுப் பொட்டலங்கள்
சென்னை: இலங்கையில் பசி, பட்டினியால் உயிருக்கு போராடி வரும் தமிழர்களுக்கு வழங்கும் பொருட்டு ரூ. 7.65 கோடி செலவில் உணவு, உடை உட்பட அத்தியாவசிய பொருட்களை கொண்ட 50 ஆயிரம் நிவாரண பைகளை தமிழக அரசு தயார் செய்து வைத்துள்ளது. இது விரைவில் இலங்கைக்கு அனுப்பப்படும் என தெரிகிறது.
இலங்கையில் போர் பகுதியில் தினமும் நூற்றுக்கணக்கான தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டு வருகின்றனர். இலங்கை ராணுவத்தின் நச்சு குண்டுகள், துப்பாக்கி ரவைகள் தமிழர்களின் உயிரை குடித்து வருகின்றனர்.
அவர்களை தவிர்த்து தற்போது உயிருடன் இருப்பவர்களும் உணவு இல்லாமல் பட்டினியாலும், காயமடைந்தவர்கள் மருந்து பொருள் இல்லாமலும் பலியாகி வருகின்றனர்.
இந்நிலையில் அவர்களுக்கு உணவு மற்றும் மருந்து பொருள் வழங்குவதற்காக போரை நிறுத்த வேண்டும் என ஐநா பொது செயலாளர் பான் கி மூன், இலங்கை அரசை கேட்டு கொண்டார். ஆனால், இதற்கு இலங்கை அரசு பதில் எதுவும் தெரிவிக்காமல் மெளனமாக இருந்து வருகிறது.
இந்நிலையில் ஏற்கனவே கடந்த நவம்பரில் 80 ஆயிரம், கடந்த மாதம் 40 ஆயிரம் உணவு பொருட்கள் உட்பட அத்தியாவசிய பொருட்களை அனுப்பிய தமிழக அரசு விரைவில் மூன்றாவது முறையாக உணவு பொருட்களை 50 ஆயிரம் நிவாரண பைகளை இலங்கைக்கு அனுப்ப இருக்கிறது.
ஒவ்வொரு நிவாரண பையிலும் 1 உணவு பொட்டலம், 1 துணி பொட்டலம், மற்றும் 1 பாத்திர பொட்டலம், என மூன்று உள்ளது.
உணவு பொட்டலங்களில் தரமான ஏ' கிரேடு அரிசி 15 கிலோ, துவரம் பருப்பு 2 கிலோ, சர்க்கரை 1 கிலோ, இரண்டு தேயிலை பாக்கெட், 1 ரின் சோப்பு, 1 கோல்கேட் பற்பசை, 1 ரெக்சோனா சோப்பு போன்றவை தனித்தனியே ஒரு பையில் போடப்பட்டுள்ளது. இதன் மதிப்பு ரூ. 350 ஆகும்.
கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் சார்பில் ரூ. 900 மதிப்புள்ள துணிகள் தனி பொட்டலங்களாக போட்டு கொடுக்கப்படுகிறது. பாத்திர பைகளில் தலா 2 தட்டு, டம்ளர், கரண்டிகள் என ரூ. 280 விலை கொண்ட பாத்திரங்கள் அனுப்பப்பட இருக்கின்றன. ஒரு நிவாரண பையின் மதிப்பு ரூ. 1,530 எனவும், மொத்த நிவாரண பொருட்களின் மதிப்பு ரூ. 7.65 கோடி என்றும் தெரிகிறது.
இவை அனைத்தையும் பைகளில் போட்டு தயார் செய்யும் பணி, சென்னையில் உள்ள 10 குடிமை பொருள் வினியோக குடோன்களில் கடந்த சில நாட்களாக நடந்தது.
தற்போது தேர்தல் விதிமுறைகள் நடைமுறையில் இருப்பதால் இலங்கைக்கு இப்பொருட்களை அனுப்புவது தொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் அரசு அனுமதி கேட்டுள்ளது. தேர்தல் ஆணையம் தலை அசைத்தவுடன் அது இலங்கைக்கு அனுப்பப்படும் என தெரிகிறது.
இது குறித்து குடிமை பொருள் வினியோக அலுவலக அதிகாரி ஒருவர் கூறுகையில்,
இலங்கை தமிழர்களுக்கு உணவு பைகள் வழங்குவதற்கான பணியில் ஏராளமான ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டு இரவு பகலாக இப்பணிகள் நடந்து வந்தது. தற்போது, இந்த பணிகள் அனைத்தும் முடிவடைந்துள்ளன. மொத்தம் 50 ஆயிரம் பைகள் தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்த பொருட்கள் அனைத்தும் கெட்டு போகாதபடி தனித்தனி பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்டு, பின்னர், பைகளில் அடைக்கப்பட்டுள்ளது. இந்த பைகள் தற்போது குடோனில் இருந்து லாரிகள் மூலமாக சென்னை துறைமுகத்துக்கு கொண்டு செல்லப்பட்டு வருகின்றன. அங்கு கண்டெய்னர்களில் இவைகள் அடைக்கப்பட்டு வருகின்றன.
பின்னர், இந்த பொருட்கள் கப்பல்களில் ஏற்றப்பட்டு, ஒன்று அல்லது இரண்டு நாட்களில் இலங்கையில் இருக்கும் இந்திய தூதரகத்துக்கு அனுப்பி வைக்கப்படும். அங்கிருந்து பாதிக்கப்பட்டோருக்கு வினியோகம் செய்யப்படும் என்றார்.